Ads Area

134பேருக்கு இலவசமாக கற்றறக்ட் சத்திரசிகிச்சைமுகாம்!


(காரைதீவு  நிருபர் சகா)

நீண்டகாலமாக எதிர்பார்ப்புடன் காத்திருந்த வறுமைக்கோட்டிற்குட்பட்ட 134 மூவின கற்றறக்ட் நோயாளிகளுக்கு இலவசமாக சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

லண்டன் அறிவொளி வளைய அனுசரணையுடன் இலங்கை சுகாதார அமைச்சுடன் இணைந்து புனர்வாழ்வும் புதுவாழ்வும் (Assist RR) அமைப்பு விஷன் 2020(VISION 2020) திட்டத்தின்கீழ் இந்த கற்றறக்ட் சத்திரசிகிச்சைமுகாமை வவுனியாவில் நடாத்தியது.

தொடர்ந்து 5 நாட்கள் நடாத்தப்பட்டநேற்று நிறைவடைந்த  இந்த சத்திரசிகிச்சை முகாமை ஓய்வுநிலை கண்சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் சம்பா பானகல தலைமையிலான இந்திய இலங்கை நிபுணர் குழுவினர் மேற்கொண்டனர். இதில் கல்முனை ஆதாரவைத்தியசாலை கண்சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் கே.பிரேம்ஆனந்த் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் யசோதா உள்ளிட்டவர்கள் இதனை இலவசமாக செய்துமுடித்தனர்.

புனர்வாழ்வும் புதுவாழ்வும் அமைப்பின் லண்டன் பணிப்பாளர் கலாநிதி வேலாயுதம் சர்வேஸ்வரன் இலங்கைக்கான தலைவர் எந்திரி ஹென்றிஅமல்ராஜ் பொருளாளர் எந்திரி கே.சிறிஸ்கந்தராஜா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

வடக்கில் வவுனியா கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் ஆகிய 4 மாவட்டங்களில் கண்சத்திரசிகிச்சை நிபுணர்கள் இல்லாத காரணத்தினால் அப்பகுதி மக்கள் கற்றறக்ட் சத்திரசிகிச்சைக்காக வருடக்கணக்கில் காத்திருப்பதாக தெரியவருகிறது. இரண்டு கண்களும் பாதிக்கப்பட்டோர் 30வீதமெனத் தெரிகிறது.

இப்படிப்பட்ட இந்த மக்களுக்கு இந்த கற்றறக்ட் முகாம் பெரிய வரப்பிரசாதமாகத்திகழ்ந்தது என பயன்பெற்ற நோயாளிகள் நன்றியுடன் தெரிவித்தனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe