சாய்ந்தமருது தோடம்பழ அணியினர் பட்ஜெட்டை தோற்கடித்தது கணக்குகள் ஒழுங்காக காட்டப்படவில்லை என்பதற்காகவா? அல்லது சாய்ந்தமருதுக்கான சபை கிடைக்கவேண்டும் என்பதற்கான அழுத்தத்திற்காகவா? என்பதற்கான விடை கிடைக்கவேண்டும்.
ஏனென்றால் கல்முனை மாநகரசபை பஜட் விவாதத்திலே கலந்து கொண்ட தோடம்பழ அணியினர்கள் யாரும், நாங்கள் இந்த பஜட்டுக்கு எதிராக வாக்களிப்பது எங்களுடைய ஊரின் கோரிக்கை வலுப்பெறவேண்டும் என்பதற்காகவே என்று பேசவில்லை, மாறாக கல்முனை மேயரினால் முன்வைக்கப்பட்ட பட்ஜட் திருப்தியானதாக நாங்கள் காணவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்தே அதற்கு எதிராக வாக்களித்திருந்தார்கள்.
அப்படியென்றால் தோடம்பழ அணியினர் பகிரங்கமாக சபையிலே கூறியிருக்கவேண்டும், பஜெட் சரியோ பிழையோ என்பதற்கு அப்பால் நாங்கள் இந்த பஜெட்டை எதிர்த்து வாக்களிப்பது எங்களுடைய கோரிக்கைகளின் நியாயத்தண்மையை மற்றவர்களும் உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதோடு, குறிப்பிட்ட தரப்பினர் எங்களது கோரிக்கைகளை கவணத்தில் எடுத்து கூடிய சீக்கிரம் தீர்த்து தர வேண்டும் என்பதற்காகவே எதிர்த்து வாக்களிக்கின்றோம் என்று கூறியிருக்கவேண்டும்.
சபையிலே அமர்ந்திருந்தவர்களில் தோடம்பழ அணியினரின் நோக்கமும் லட்சியமும் வேறானது என்பதை எல்லோரும் அறிந்திருந்த ஒன்றுதான் என்கின்றபோது, அந்த அணியினர் தங்களுடைய நோக்கங்களை தெளிவுபடுத்தாமல், மற்ற உறுப்பினர்களைப்போல் பத்தோடு பதினொன்றாக பஜட்டின் மீதான குறைகளைச் சுட்டிக்காட்டி அதற்காகத்தான் எதிர்த்து வாக்களித்தோம் என்று கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இந்தச் செயல்பாடானது அவர்களின் நோக்கங்கள் திசைமாறிச் செல்லுகின்றதா என்ற கேள்வியையும் எழுப்புகின்றது.
ஆகவே சாய்ந்தமருது தோடம்பழ அணியினர் நாங்கள் சபையிலே அமர்ந்திருப்பது ஒரு லட்சியத்தை அடைந்து கொள்வதற்காகவே தவிர, மாறாக உங்களது மாநகரசபையின் இயல்பான நடவடிக்கைகளுக்கு அனுசரணையாக இருப்பதற்கு அல்ல என்று பகிரங்கமாக கூறி தங்களுடைய பயணத்தை தொடரவேண்டுமேயொழிய, மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து நாங்களும் உங்களைப்போல்தான் என்று செயல்பட முற்படுவது அவர்களுடைய லட்சத்துக்கு மாற்றமானது என்பதே எங்களின் கருத்தாகும்..
எம்எச்எம்.இப்றாஹிம்
கல்முனை..