இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கல்முனை மண் மீது கொண்ட அளப்பரிய பற்றினால், கல்முனை மண்ணை பாதுகாக்கும் சிந்தனையோடு உருவாக்கப்பட்ட, உருவான ஒரு அமைப்பே மெஸ்ரோவாகும். ஆரம்பத்தில் மிக வீரியத்தோடு இவ்வமைப்பு செயற்பட்டாலும், பிற்பட்ட காலப்பகுதியில் மிக அமைதியாக இயங்கியது. தற்போது மீண்டும் முன்னரை விட பன் மடங்கு வேகமாக செயல்படுவதை அவதானிக்க முடிகிறது. இவ்வமைப்பு இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் தனிப்பட்ட அரசியல் வளர்ச்சிக்கும் மிகப் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்த ஒரு அமைப்பு என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
இதுவரை மு.காவின் வாக்குகளை நம்பி அரசியல் செய்து வந்த இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் இனியும் அதனை நம்பினால் தொடர்ந்து அரசியலில் பயணிக்க முடியாது என்ற விடயத்தை உணர்ந்ததன் வெளிப்பாடே தனி இராஜ்ஜிய பலப்படுத்துகை எனலாம். மு.கா சார்பாக தேர்தல் கேட்டால் ஒரு கணிசமான வாக்கு விழும். அதோடு, தனது கல்முனை தொகுதி மு.காவின் கோட்டையாகவிருந்தது. இது விருப்பு வாக்கில் முதன்மை வகிக்கவும் காரணமாக அமைந்திருந்தது. எனவே, இதுவரை காலமும், தனது தனிப் பலத்தை நிரூபிக்கும் தேவை ஹரீஸுக்கு இருந்திருக்கவில்லை. நோகாமல் நொங்குண்ண முடியுமென்றால், ஏன் கூத்தாட வேண்டும். ஆனால், இப்போது நிலமை தலை கீழாகவுள்ளது.
முன்பெல்லாம் மு.காவென்றால் கண்ணை மூடிக்கொண்டு மக்கள் வாக்களிப்பார்கள். இப்போது அந்த நிலையில்லை. மு.காவின் கோட்டையான கல்முனை மாநகர சபை பட்ஜட்டை கூட நிறைவேற்ற பலமில்லாத நிலையிலுள்ளது மு.கா. இவ்வாறான நிலையில் இனிமேலும் மு.காவை நம்பி அரசியல் செய்வதை விட, தன் சுய பலத்தை கட்டியெழுப்புவதே பொருத்தமானது. நினைத்த நேரத்தில், நினைத்த கட்சி மாறலாமல்லவா?
அண்மையில் நடந்தேறிய ஆட்சி மாற்ற பிரச்சினையில் கொழுத்த சலுகைகள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸுக்கு பேசப்பட்டிருந்தன. அதில் தேசிய தேசியப்பட்டியல் உறுதிமொழியும் இருந்ததான பேச்சுமுள்ளது. மீண்டும் அப்படியான ஒரு சலுகையை பேரம் பேசி பெற, இப்படி சுய பலத்தை நிரூபிப்பது பொருத்தமான நகர்வாக அமையும். இதனூடாக பெருமளவான மு.காவின் போராளிகளையும் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தன்னோடு இணைத்துள்ளார். இன்னுமொரு கட்சிக்கு மாறி தனக்கு ஆள் சேர்ப்பதை விட, மு.காவிலுள்ள நிலையில் ஆள் சேர்த்து கட்சி மாறினால், மு.காவிலுள்ள சிலரையும் தன்னோடு ஹரீஸால் அழைத்து செல்ல முடியும்.
இவ்வாறு பல சிந்தனைகளை அடிப்படையாக கொண்ட ஒரு காய் நகர்த்தலே மெஸ்ரோ அமைப்பின் எழுச்சியாகும். இவ்வாறான நிகழ்வுகளை இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் மு.காவின் இளைஞர் எழுச்சிக்காக செய்திருந்தால், அக் கட்சியின் நிலை நிச்சயம் வேறு விதமாக அமைந்திருக்கும். மு.காவின் உயரிய சலுகைகளை பெற்றவர்களில் ஒருவர் தான் ஹரீஸ். இப்போதும் அவருக்கு மு.கா இராஜாங்க அமைச்சை வழங்கி கௌரவித்துள்ளது. தனது அரசியல் இருப்புக்கு அச்சுறுத்தல் என்ற நிலை வந்ததும் துடி துடித்து வாக்கு வேட்டை வியூகங்கள் வகுக்கும் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் இத்தனை காலமும் மௌனமாக இருந்தமை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயலாகும். இது தற்போது மு.காவின் உயர் மட்டத்தில் பேசப்படும் ஒரு விடயமும் கூட.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.