யாழ்ப்பாணத்துக்கு நேற்றுச் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திருநெல்வேலியில் விவசாய ஆராய்ச்சி, உற்பத்தி நிலையத்தைத் திறந்து வைத்தார். அத்துடன், தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விவசாய உள்ளீடுகளையும் அவர் வழங்கினார்.
இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் இந்தத் தொழில்களை நவீனமயப்படுத்த வேண்டும். அப்போதுதான் சிறந்த அறுவடை பெற இயலும். மீன்பிடித்துறையை அப்படி நவீனமயமாக்கிக் குளிரூட்டிகளை அமைக்கவுள்ளோம். இதில் தனியாரும் அரசும் இணைந்தே செயற்படவேண்டும்.
21ஆம் நூற்றாண்டை நோக்கி நாங்கள் முன் செல்ல வேண்டும். நான் நல்லூர் ஆலயம் மற்றும் வீடமைப்புத் திட்டங்கள் போன்றவற்றுக்கு இன்று சென்றேன். இப்போது மக்கள் அமைதியாக – சந்தோசமாக வாழ்வதை நான் கண்டேன்.
மஹிந்த – கோட்டாபய ஆட்சிக் காலத்தில் இந்த நிலைமையா இருந்தது. மக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்தார்கள். துரதிஷ்டவசமாக எங்கள் அரசின் காலத்தில் தேவாலயங்களில் குண்டுகள் வெடித்தன. அந்தத் தாக்குதல்களுடன் தொடர்புடைய 200 பேர் வரை கைதுசெய்யப்பட்டுவிட்டனர். நாங்கள் அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
கொழும்பு உச்சக்கட்டப் பாதுகாப்புப் பகுதியாகக் கூறப்பட்ட காலத்தில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் வீதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
கொழும்பில் உச்சக்கட்டப் பாதுகாப்பு இருந்த காலகட்டத்திலே இடம்பெற்ற இந்தக் கொலையைச் செய்தவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. பாதுகாப்புமிக்க பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயிலில்தான் முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

