இந்த நாட்டில் சிறுபான்மை பெரும்பான்மை என்ற ஒன்று இல்லை : மக்கள் விடுதலை முன்னணியின் சலீம் ஆதம் !!
அபு ஹின்ஸா
ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் என யாரும் போட்டியிடாத ஒரு முக்கிய ஜனாதிபதித் தேர்தலாக எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை நோக்கலாம். வெள்ளையர்களிடம் இருந்து இந்த நாடு சுதந்திரம் பெற்ற போது எந்த ஒரு இலங்கைப் பிரஜையும் ஒரு ரூபாய் கூட கடனாளியாக இருந்திருக்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் சலீம் ஆதம் தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு ஒவ்வொரு இலங்கைப் பிரஜையும் ஐந்து லட்சத்து 30 ஆயிரம் கடனுடன் வாழ்கின்றோம். 98 சதவீதமான உழைக்கும் மக்களை இரண்டு சதவீதமான முதலாளித்துவ மக்கள் ஆட்சி புரிவதனால்தான் இவ்வாறான நிலை உருவாகியுள்ளது.
மக்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றார்கள் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க அவர்கள் ஊழலற்றவர் ஏழைகளின் பசி அறிந்த அவர் நன்கு படித்தவர் இந்த நாட்டை ஆட்சி புரிவதற்கு சகல திட்டங்களும் கொன்டவர் என்று பேசிக் கொள்கின்றார்கள் இருந்தாலும் வெல்வாரா என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்து கொண்டிருக்கின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் அனுரகுமார நல்லவர்தான் ஆனால் வெல்ல மாட்டார் என்கின்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்கள்.
இம்முறை ஆட்சியை தீர்மானிக்க போகும் வாக்குகள் இளைஞர்களின் வாக்குகளாகவே இருக்கும். அரசியல் தலைவர்கள் தங்களுடைய வாக்குகளை பெற்றுக்கொள்ள பெரும்பான்மை, சிறுபான்மை என்று சொல்லி புதிய சொற்களை அறிமுகப்படுத்தி எங்களை பயமுறுத்துகிறார்கள் ஆனால் என்னைப் பொருத்தவரையிலும் என்னுடைய கட்சியை பொறுத்தவரையிலும் இந்த நாட்டில் சிறுபான்மை பெரும்பான்மை என்ற ஒன்று இல்லை. எல்லோரும் இலங்கையர்.

