ஜனாதிபதி தேர்தலுக்காக தமிழ் தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளில் வடக்கு-கிழக்கு இணைப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஜனாதிபதி தேர்தலுக்காக, தமிழ்க் கட்சிகள் முன்வைத்த 13 அம்சக் கோரிக்கைகளில் பலவற்றை ஏற்றுக்கொள்வதாகவும், எனினும் வடக்கு- கிழக்கு இணைப்பு என்ற கோரிக்கையை மாத்திரம் ஏற்றுகொள்ள முடியாது என்றும் ஜேவிபி தெரிவித்துள்ளது.
வடக்கு - கிழக்கின் தமிழ் தரப்பு 13 கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைத்துள்ளனர். இதில் வடக்கு -கிழக்கு தனி அலகாக்கும் கோரிக்கைக்கு நாம் இணங்கவில்லை. வடக்கு -கிழக்கு தமிழர் தாயகம். ஆகவே அதனை எமக்கு தாருங்கள் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது. கிழக்கில் முஸ்லிம் மக்கள் அதிகமாகவும் சிங்களவர்கள் ஓரளவு வாழ்கின்றனர். திருகோணமலையை எடுத்துக் கொண்டாலும் யாழ்ப்பாணத்தை எடுத்துக்கொண்டாலும் அங்கு சிங்களவர்கள் வாழ்கின்றனர். ஆகவே அவர்களை நிராகரித்து வடக்கு கிழக்கை தனி அலகாக அங்கீகரிக்க முடியாது.
எனினும் தமிழர் தரப்பு முன்வைத்த பல கோரிக்கைகள் நியாயமானதாக உள்ளது. வடக்கின் தனியார் நிலங்களை மீண்டும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும், இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதும் நியாயமானது. இப்போது இவ்வாறான மோசமான சட்டம் தேவையில்லை. அதேபோல் இப்போது கொண்டுவரும் சட்டமும் மோசமானது அதனை நாமும் எதிர்கின்றோம்.

