கோத்தபாய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்காவிடின் முஸ்லிம் சமூகம் வன்முறைகளுக்கு இலக்காக நேரிடும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வெளியிட்ட கருத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கண்டனம் வெளியிட்டிருக்கின்றர்.
அண்மையில் சமூகவலைத்தளங்களில் முஸ்லிம்கள் மத்தியில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உரையாற்றும் காணொளியொன்று மிக வேகமாகப் பரவிவருகின்றது.
'கோத்தபாய ராஜபக்ஷ ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டார். எனவே முஸ்லிம் மக்களுக்கு நாங்கள் கூறுவது என்னவென்றால், இவ்வெற்றியில் முஸ்லிம்களும் ஒரு பங்காளராக வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் வலுவான தாக்குதல்களுக்கு உள்ளாக நேரிடும்'
டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் இக்காணொளியில் அலி சப்ரி கூறும் கருத்துக்கள் கடும் கண்டத்திற்கு உள்ளாகியிருக்கின்றது. சமூக செயற்பாட்டாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் முஸ்லிம் சமூகத்தினரை தவறாக வழிநடத்த வேண்டாம் என்றும், தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அவர்கள் சுயமாக மேற்கொள்வதற்கு இடமளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

