Ads Area

சீதனக் கொடுமையால் பெற்ற பிள்ளையை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்.

சீதனக் கொடுமையால் பெற்ற பிள்ளையை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த மோசூர் கிராமம் கண்ணபிரான் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் (32). இவர், சென்னை பெரம்பூரில் அரசு பேருந்து நடத்துநராக பணிபுரிந்துவருகிறார். இவரின் மனைவி ரம்யா (24). இவர்களுக்கு, 2016 செப்டம்பர் 5-ம் தேதி திருமணம் நடைபெற்றது. ஒன்றரை வயதில் அஸ்வதி என்ற ஒரேயொரு பெண் குழந்தை மட்டும் இருந்தது. திருமணத்தின்போது, 25 பவுன் நகை, சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக ரம்யாவின் பெற்றோர் கொடுத்துள்ளனர். 

இந்த நிலையில், ரம்யாவின் மாமனார் ராஜேந்திரனும், மாமியார் தனலட்சுமியும் கூடுதலாகப் 3 பவுன் கேட்டுக் கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. மன உளைச்சலுக்கு ஆளான ரம்யா யாரிடமும் சரியாக பேசாமல் இருந்துள்ளார். வரதட்சணை கொடுமை குறித்து தன் பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். நேற்று காலை கணவர் சதீஷ் வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். மாமனாரும் மாமியாரும் 100 நாள் திட்ட வேலைக்குச் சென்றுவிட்டனர். 

ரம்யா குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்தார். தினமும் சித்ரவதையை அனுபவிப்பதால் விரக்தியிலிருந்த ரம்யா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். இவர்களிடம் குழந்தையை விட்டுச் செல்ல மனமில்லாமல் குழந்தையையும் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தார். பின்னர், அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மாலையில் வீடு திரும்பிய மாமனாருக்கும் மாமியாருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. 

வீட்டு கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் நீண்ட நேரமாக வெளியிலிருந்து கதவை தட்டிக்கொண்டே இருந்தனர். பின்னர், சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்றுபார்த்தனர். அப்போது, மருமகள் ரம்யாவும் பச்சிளம் குழந்தையான பேத்தியும் தூக்கில் சடலமாக தொங்கியதைப் பார்த்து பதறிப் போய் கதறி அழுதனர். தகவலறிந்ததும், அரக்கோணம் டவுன் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றினர்.

பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு உடல்களை அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ரம்யாவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் விசாரணை நடத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், உயிரிழந்த ரம்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரக்கோணம் நகரக் காவல் நிலையத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். 

வரதட்சணை கொடுமையால்தான் இந்த விபரீத சம்பவம் நடந்திருக்கிறது. ரம்யாவின் மாமனார், மாமியார், கணவரைக் கொலை வழக்கில் கைதுசெய்ய வேண்டும். சித்ரவதை குறித்து போனில் ரம்யா பலமுறை எங்களிடம் கூறி அழுதுள்ளார். தற்கொலை வழக்காகக் கருதி குற்றவாளிகளைத் தப்ப வைக்கக் கூடாது’ என்று போலீஸாரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். ‘உதவி கலெக்டரின் விசாரணைக்குப் பிறகு கைது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று போலீஸார் உறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

நன்றி - விகடன் (தமிழ்நாடு)
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe