(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனைப் பிரதேச தனியார் கல்வி நிலையங்களை மூடுவதற்கு தீர்மானம். - கல்முனை மேயர் உத்தரவு.
கல்முனை மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற தரம்-11 வரையான மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடாத்தும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் டிசம்பர் 15 தொடக்கம் 31 ஆம் திகதி வரை மூடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் ஓய்வு, சுற்றுலாப் பயணங்கள், வெள்ள அனர்த்த அபாயம் மற்றும் டெங்கு பரவல் உள்ளிட்ட பல விடயங்களை கவனத்தில் கொண்டு டிசம்பர் 15-31 காலப்பகுதியில் மேற்படி தனியார் கல்வி நிலையங்களை மூடி, மாணவர்களுக்கு விடுமுறை வழங்குவதன் மூலம் அவர்களது நலன்களையும் பாதுகாப்பையும் பேண முடியும் என்று மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் இதன்போது முன்வைத்த யோசனைக்கு தனியார் கல்வி நிலையங்களின் இயக்குனர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
அத்துடன் பொலிஸ் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களும் இந்த யோசனைக்கு வரவேற்பு தெரிவித்ததுடன் பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கினர்.
இவற்றைக் கண்காணிப்பதற்காக பொலிஸ் அதிகாரிகள், மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களை உள்ளடக்கிய குழுவொன்றும் அமைக்கப்பட்டது. வருடத்தில் நான்கு முறையாவது அனைத்து கல்வி நிலையங்களும் இக்குழுவினரால் பரிசோதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.சம்சுதீன், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஜே.எம்.நிஸ்தார், ஏ.எல்.எம்.ஜெரீன், ஏ.எம்.பாறூக் உட்பட மாநகர சபையின் வருமான பரிசோதகர்களும் பங்கேற்றிருந்தனர்.