நடை பெற்று முடிந்த தேர்தலுக்குப் பின்னர் தற்போது இலங்கை அரசியலில் அதிக பேசுபொருளாக மாறியிருப்பது கடந்த அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட 19வது அரசியல் சீர்திருத்தச் சட்டமாகும். தற்போதைய பொதுஜன பெரமுன அரசாங்கம் 19வது அரசியல் சீர்திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்குவது அல்லது அதில் பல திருத்தங்களை செய்வது என்ற நிலைப்பாட்டில் இருந்து வருகின்றனர், இதற்கான நிபுணர் குழுவினரும் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இப்படி இன்று பரவலாக பேசு பொருளாக மாறியுள்ள 19வது அரசியல் சீர்திருத்தச்சட்டத்தில் அப்படி என்ன விசேடமிருக்கிறது..?? இதோ விபரம்.
01. ஜனாதிபதியாக ஒருவர் 2 தடவைகளுக்கு மேல் மக்களால் தெரிவு செய்யப்பட முடியாது. (முன்னர் இக்கட்டுப்பாடு இல்லை)
02. ஜனாதிபதிக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்ய முடியும். (முன்னர் முடியாது)
03. ஜனாதிபதிக்கு அமைச்சுப் பொறுப்புக்கள் வைத்திருக்க ஏற்பாடுகள் இல்லை. (முன்னர் விரும்பிய அமைச்சுக்களை வைத்திருக்கலாம்)
04. இரட்டைப் பிரஜையொருவர் ஜனாதிபதியாகவோ பாராளுமன்ற உறுப்பினராகவோ முடியாது.(முன்னர் இக்கட்டுப்பாடு இல்லை)
05. ஜனாதிபதி பிரதமரை பதவி நீக்கும் ஏற்பாடு நீக்கப்பட்டுள்ளது.
(முன்னர் பதவி நீக்கலாம்)
06. ஜனாதிபதி பாராளுமன்றம் நிராகரித்த சட்டமூலத்தை மக்கள் தீர்ப்புக்கு விட்டு சட்டமாக்கும் ஏற்பாடு அகற்றப்பட்டுள்ளது.
07. ஜனாதிபதி பாராளுமன்றத்தை 4-1/2 ஆண்டுகளுக்குப் பின்னரே கலைக்கலாம். (முன்னர் ஒரு வருடத்தின் பின்னர் கலைக்கலாம்)
08. ஜனாதிபதி பாராளுமன்றத்தை 4-1/2 ஆண்டுகளுக்குள் கலைக்க 2/3 ஆதரவு வேண்டும். (முன்னர் ஒரு ஆண்டுக்குள் கலைக்க 1/2 போதும்)
09. பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்கு 2 வாரங்களுக்கு முன்னர் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும். (முன்னர் ஒரு வாரத்துக்கு முன்பு)
10. ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனையுடனேயே அமைச்சர்களை நியமிக்கவும் நீக்கவும் வேண்டும். (முன்னர் பிரதமரின் ஆலோசனை கட்டாயமில்லை)
11. அரச தாபனங்களிலிருந்து தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை பிரஜைகளுக்கு உண்டு. (முன்னர் இவ்வேற்பாடு இல்லை)
12. ஜனாதிபதியினதும் பாராளுமன்றத்தினதும் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். (முன்னர் 6 ஆண்டுகள்)
13. ஜனாதிபதித் தேர்தலில் 35 வயதை அடைந்தோரே போட்டியிடலாம்.
(முன்னர் 30 வயது)
14. அமைச்சரவை அமைச்சர்கள் 30 வரையும் ஏனைய அமைச்சர்கள் 40 வரையும் இருக்கலாம். (முன்னர் இக்கட்டுப்பாடு இல்லை)
15. 10 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்புப் பேரவையின் சம்மதத்துடனேயே ஜனாதிபதி உயர் பதவிகளுக்கு ஆட்களை நியமிக்கலாம். உயர் நீதிமன்ற, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், பாராளுமன்ற செயலாளர் நாயகம், ஒம்புட்ஸ்மன் (முன்னர் விரும்பியவாறு தெரிவு செய்து நியமிக்கலாம்)
16. அரசியலமைப்புப் பேரவையின் சிபாரிசிலேயே ஜனாதிபதி உயர் ஆணைக்குழு உறுப்பினர்களை நியமிக்கலாம். தேர்தல் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, பொதுச்சேவை ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, லஞ்சம் ஊழலை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய பெறுகை ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு (முன்னர் ஜனாதிபதி விரும்பியவாறு தெரிவு செய்து நியமிக்கலாம்)
நன்றி - Muhuseen Raisudeen

