நூருல் ஹுதா உமர்
காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில் அவர்கள் சட்டங்கள் தெரியாமல் பிரதேச சபையை பிழையாக வழிநடத்துவதாக காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் கே.குமாரசிறி குற்றச்சாட்டை முன்வைக்கிறார். காரைதீவு பிரதேச சபையின் 31வது அமர்வில் நடைபெற்ற பிரச்சினைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு நேற்று (26) மாலை விளக்கமளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் பேசிய அவர், கடந்த 14.09.2020 அன்று நடைபெற்ற சபை அமர்வில் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான வரவு செலவு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள தவிசாளரின் வாகன சாரதிக்கான ஜுன் மாதத்திற்கான மேலதிக நேர கொடுப்பனவை தேர்தல் காலத்தில் தவிசாளர் வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தியமையினால் சபை நிதியிலிருந்து வழங்க முடியாதென தான் எதிர்ப்பை வெளியிட்டதாகவும் அதனால் அந்த கணக்கறிக்கையில் உள்ள அவ்விடயத்தை ஏற்க முடியாது என்று தான் எதிர்த்தக்காகவும் குறிப்பிட்டார்.
மேலும் அப்போது அங்கு கருத்து தெரிவித்த பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில் அவர்கள் வரவு செலவு அறிக்கையிலுள்ள ஒரு விடயத்தை மாத்திரம் நீங்கள் எதிர்க்க முடியாதெனவும் எதிர்க்க வேண்டுமாக இருந்தால் ஒட்டுமொத்த வரவு செலவு அறிக்கையையும் எதிர்க்க வேண்டுமென கூறியதாகவும் தெரிவித்தார்.
இச்சம்பவமானது தவிசாளர் உள்ளுராட்சி மன்ற சட்டத்தை அறியாமல் கூறியதுடன் அவர் கௌரவமிக்க சபையை பிழையாக வழிநடத்தும் செயலாகவே கருதவேண்டியுள்ளது. ஆகவே இந்த விடயத்தில் தெளிவு பெரும் நோக்கில் அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளரிடம் நான் வினவியபோது, வரவு செலவு அறிக்கையிலுள்ள பாதகமான விடயம் பெரும்பான்மையினர் எதிர்ப்பார்களாயின் அதனை தவிர்த்து ஏனையவற்றை நிறைவேற்றலாம் எனவும் அதனை அடுத்த சபை அமர்விற்கு முன்னர் பரிசீலனை செய்து அமர்விற்கு கொண்டுவர முடியும் என அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் தெரிவித்தார்.
மேலும் வாகன சாரதியின் குறிப்பேடு (ரண்ணிங்சாட்டை) முகநூலில் பதிவிட்டது பிழை என்ற காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில் அவர்களின் குற்றசாட்டு தொடர்பிலும் அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளரிடம் வினவியபோது குறிப்பேடு (ரண்ணிங்சாட்) என்பது முக்கியமான அலுவலக ஆவணமில்லை எனவும் சாதாரண பொதுமகன் தகவலறியும் சட்டத்தின் மூலம் இதனை பெற்றுக்கொள்ள முடியும் என கூறியதாகவும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் கே.குமாரசிறி மேலும் தெரிவித்தார்.