சம்மாந்துறை எல்லைகளினுாடாக வரும் வெளியூர் வியாபாரிகளை பதிவு செய்து தொற்று நீக்கும் நடவடிக்கை ஒன்று தற்போது (2020-10-26) சம்மாந்துறையில் இடம் பெற்று வருகின்றது.
சம்மாந்துறை பிரதேச சபை, பிரதேச செயலகம், பொலிஸ், சம்மாந்துறை வர்த்தக சம்மேளனம் மற்றும் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து கொவிட் 19 வைரஸின் பரவலை சம்மாந்துறையில் தடுக்கும் நோக்கில் சம்மாந்துறைக்குல் உள் நுழையும் வெளிப் பிரதேச வியாபாரிகளை இடைநிறுத்தி வியாபாரிகளையும், அவர்களது வாகனங்களையும் பதிவு செய்வதோடு தொற்று நீக்கி கிருமிநாசினியும் தெளித்து, உடல் வெப்பநிலையினையும் பரிசோதனை செய்து சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றமையினை உறுதிப்படுத்தி திகதியிட்ட வியாபார அனுமதி அட்டை " ஒன்றினை வழங்கும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை முதல் சம்மாந்துறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக சம்மாந்துறை கொரோனா வைரஸ் தடுப்பு வழிநடாத்தல் குழுக் கூட்ட தீர்மானத்திற்கமைவாக சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும் முன்னாள் பராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம். முஹம்மட் நெளஷாட் அவர்களின் பணிப்புரைக்கமைவாக சம்மாந்துறை பிரதேசத்தின் நுழைவாயில்களான நெல்லுப்பிடிச் சந்தி , வங்களாவடி , வீரமுனைச் சந்தி மற்றும் பள்ளாற்று சந்தி ஆகிய 4 இடங்களிலும் சோதனை சாவடிகளை மு.ப. 6.00 தொடக்கம் மு.ப. 10.00 மணி வரை முன்னெடுக்கப்படுகின்றது.
நன்றி - முஹம்மட் நபீல் (Green Chilli) மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை.