Raazi Mohamed.
2018ல், திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பித்துக் கொண்டிருந்த 4 முஸ்லிம் ஆசிரியைகள் தங்களது கலாச்சார ஆடையான ஹபாயாவை அணிந்து கொண்டு பாடசாலைக்கு வரமுடியாது என்று பாடசாலை நிர்வாகம் தடைவிதித்ததைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் சார்பாக மனித உரிமை ஆணைக்குழுவுக்கு குரல்கள் இயக்கம் தோன்றியிருந்தது.
விசாரணையைத் தொடர்ந்து மனித உரிமை ஆணைக்குழு 2018 பெப்ரவரி மாதம் வெளியிட்ட தனது பரிந்துரையில் கலாச்சார ஆடையை அணிந்து செல்வது ஆசிரியைகளின் அடிப்படை உரிமை என்றும் அந்த உரிமையை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி மீறி இருக்கின்றது என்றும் உடனடியாக அவ்வாசிரியைகள் ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு மீள சேர்க்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்திருந்தது.
மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரை வெளியாகி 3 வருடங்கள் ஆகியும் அவ்வாசிரியைகள் ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு மீளச் சேர்க்கப்படவில்லை.
மூன்று வருட காலமாக இணைப்பிலே இருக்கும் அவ்வாசிரியைகள் பல வகையான பிரச்சினைகளுக்கும் ஓரங்கட்டலுக்கும் உள்ளானார்கள். ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு ஹபாயா அணிந்து கொண்டு வந்த வேறு முஸ்லிம் ஆசிரியைகளுக்கும் இதே கதி நடந்தது. இப்போராட்டத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் 3 ஆசிரியைகள் நிர்வாகம் செல்வதைக் கேட்டு வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றத்தை வேண்டினார்கள்.
ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி மனித உரிமை ஆணைக்குழுவின் முடிவினையும் உதாசீனம் செய்து தொடர்ந்தும் முஸ்லிம் ஆசிரியைகளின் உரிமைகளைப் பறித்துக் கொண்டே வருகிறது.
இந் நிலையில் ஒரே ஒரு ஆசிரியை மாத்திரம் தனது அடிப்படை உரிமைக்காகப் போராடுவதில் உறுதியோடு இருந்தார். பல எதிர்ப்புகளுக்கும், சவால்களுக்கும் மத்தியில் அவ்வாசிரியை மாத்திரம் தனியாக இலங்கை மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் கட்டாணை (WRIT) வழக்கொன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். குரல்கள் இயக்கத்தின் முழு ஆதரவோடும் வழிகாட்டலோடும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரையை செயற்படுத்துமாறும் தன்னை மீண்டும் ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு அனுப்புமாறும்,தனக்குத் தொடர்ச்சியாக ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மனித உரிமை மீறலை தடுக்குமாறும் தனது மனுவில் மனுதாரராகிய ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் கோரியிருக்கிறார்.
இவ்வழக்கின் மனுதாரர்களாக ஷண்முகாவின் அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜன்,வலயக் கல்விப் பணிப்பாளர் சிறீதரன், மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிஸாம்,கல்வி அமைச்சின் செயலாளர்,மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கு எதிர்வரும் வாரங்களில் விசாரணைக்கு வருகிறது.

