ஐக்கிய அரபு இராஜ்ஜிய துபாயில் தனது பெண் பிள்ளை ஒருவரை பாடசாலையில் சேர்த்து கல்வி கற்பிக்கத் தவறிய தந்தையொருவர் கைது செய்யப்பட்டு விசாரனைக்காக குடும்ப குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இவர் தனது பிள்ளைக்குத் தேவையான ஆள் அடையாள ஆவணங்களைக் கூட இதுவரை பெற்றுக் கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் மீது உரிய நேரத்தில் பிள்ளைக்கான அடையாள ஆவணங்களைப் பெறத் தவறியமை மற்றும் பிள்ளையை பாடசாலையில் சேர்க்காமை ஆகிய இரண்டு குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரனைகளை துபாய் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
சிறுவர்களை பள்ளிக்கு அனுப்பாது இருப்பது போன்ற சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் பாரிய குற்றங்களாகும்.
கடந்த வருடம் துபாய் காவல்துறையினரால் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 103 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளில் 17 வழக்குகள் பிள்ளைகளுக்கான அடையாள ஆவணங்களைப் பெறத் தவறியமையும், 14 வழக்குகள் அவர்களின் கல்வி உரிமை மறுக்கப்பட்டமையும் உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராஜ்ஜிய மனித உரிமைகள் அதிகாரி மேஜர்-ஜெனரல் டாக்டர் முகமது அப்துல்லா அல் முர் கூறுகையில், அனைத்து குழந்தைகளுக்கும் பொருத்தமான வாழ்க்கைத் தரங்கள், சுகாதார சேவைகள், கல்வி, அத்தியாவசிய சேவைகளில் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் மேலும் அவர்கள் மீது எந்த விதமான பாகுபாடுகளும் காட்டப்படக் கூடாது.
அவ்வாறில்லாது சிறுவர் உரிமைகள் மீறப்பட்டு குழந்தைகள் தொடர்பிலான துஷ்பிரயோகங்கள் இடம் பெறும் பட்சத்தில் அவற்றிக்கு எதிராக ஐக்கிய அரபு இராஜ்ஜிய சட்டம் கடுமையான நடவடிக்கையினை மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி மூலம் - https://www.khaleejtimes.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.