Ads Area

வேலைக்காக வெளிநாடு சென்றவர் 4 ஆண்டுகளுக்கு பின்பு ஊர் திரும்பிய போது நடுவானில் உயிரிழந்த சோகம்!

திருமணமாகி, 2 மாதத்தில் மலேசியாவிற்கு வேலைக்கு சென்றவர் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஊர் திரும்பிய போது நடுவானில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் நீர்ப்பழனி அருகே நரியப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வேல்முருகன் (36). கடந்த 2017ம் ஆண்டு இவருக்கும், நிஷா ராணி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணமான, 2 மாதத்தில் மணப்பாறையை சேர்ந்த ரவி, அவரது மகன் ரவிராஜ் ஆகியோருக்கு சொந்தமாக மலேசியாவில் உள்ள சலூனில் வேல்முருகன் வேலைக்கு சென்றார்.

நான்கு ஆண்டுகளாக அங்கு சலூனில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வேல்முருகனுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடல்நிலை மோசமானதை அடுத்து, வேல்முருகன் ஊர் திரும்ப ஏற்பாடு செய்துள்ளனர்.

இதையடுத்து, சில நாட்களுக்கு முன்னர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மலேசியாவில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டார். விமானம் திருச்சி வந்தடைந்ததும் மற்ற பயணிகள் எல்லாம் இறங்கி விட, வேல்முருகன் இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்து கிடந்துள்ளார். விமான நிலைய மருத்துவர்கள் வேல்முருகன் இறந்ததை உறுதி செய்தனர்.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோர், மனைவி, உறவினர்களைக் காண ஆவலோடு வந்தவர் நடுவானிலேயே உயிரிழந்து சடலமாக வந்த சேதி கேட்டு, அவரை அழைத்துச் செல்ல திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்த தாய், தந்தை, மனைவி உள்ளிட்ட உறவுகள் பேரதிர்ச்சிக்குள்ளாகினர்.

வேல்முருகனின் உயிரற்ற உடலை கண்டு அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி, அங்கிருந்தவர்களை கலங்க செய்தது. இதுகுறித்து வேல்முருகன் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமாகி 2 மாதத்தில் குடும்ப வருமானத்திற்காக, நல்ல உடல் நிலையோடு மலேசியா சென்றவர், சடலமாக திரும்பியுள்ளார். வேலைக்கு அழைத்துச் சென்றவர்கள் உழைப்பை உறிஞ்சிக் கொண்டு, உடல்நலமில்லாமல் இருந்த போது உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe