பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
திடீர் காலநிலை மாற்றம் காரணமாக கல்முனை பிராந்திய கடற்கரைகளில் கரைவலை தோணிகளுக்கு அதிகளவான கீரி மீன்கள் பிடிபடுகின்றன.
நேற்று (30) மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, பாலமுனை, அக்கரைப்பற்று உள்ளிட்ட கடற்பரப்பில் கரைவலை தோணிகளுக்கு நீண்ட நாட்களின் பின்னர் அதிகளவான கீரி மீன்கள் பிடிக்கப்பட்டன. குறித்த கீரி மீன்கள் உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ 250 முதல் 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதேவேளை, அதிகளாவான மீன்கள் பிடிக்கப்பட்டதாக தகவல் பரவியதையடுத்து, பொது மக்கள் மீன்களைப் பார்வையிடுவத்ற்காக கடற்கரைப் பகுதியை நோக்கி வருகை தந்ததைக் காண முடிந்தது.
அண்மைக்காலமாக கல்முனை பிராந்திய கரை வலை தோணிகளுக்கு அதிகமான மீன்கள் பிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இங்கு பிடிக்கப்படும் மீன்களின் பெறுமதி சுமார் மூன்று இலட்சம் ரூபா முதல் வெளியிடங்களுக்கும் உள்ளூர் சந்தைகளுக்கும் விநியோகம் செய்யப்படுகின்றது. இதேவேளை, தற்போது கல்முனை கடற்கரையில் கரை வலை மற்றும் ஆழ்கடல் மீன்பிடி என்பன தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
மீனவர்கள் பிடித்த மீன்களை சுகாதார சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி விற்பனை செய்து வருகின்றனர். கடந்த கொரோனா காரணமாக பொதுமுடக்கம் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட போதிலும் எவ்வித சிரமமுமின்றி கடற்றொழில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

