Ads Area

"ஒன்டுக்கும்", "இரண்டுக்கும்" போவதை மாணவர்கள் அடக்கி வைக்கிறார்கள் (சில பாடசாலைகளில் மாணவர்கள் சந்திக்கும் பெரும் பிரச்சினை)

 இவைகளையும் பேசுவோமா?

இன்னும் கொஞ்ச நாட்களில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன. புது வருடம்,புது வகுப்பு, புதிய ஆடைகள் என மாணவர்களுக்கு குதூகலம். ஆனால், மீண்டும் அதே உடைந்த டொய்லட். அதே 'கப்' வாசம். அதே கறைபடிந்த சுவர். உடைந்த கொமோட். தண்ணீர் வராத "ஸ்திஞ்சா காமறா'. இவைகளை நினைத்தால் பலருக்கு குமட்டிக் கொண்டு வரும். அந்த புது வருட சுகானுபவம், சந்தோஷம் மறந்து போகும். 

பாடசாலை அதன் சுற்றாடல் எப்படி இருக்கிறது? என்பது குறித்து நாங்கள் பிரக்ஞையற்று இருக்கிறோம் என்பதற்கு மேற்குறித்த வர்ணிப்பு நல்ல உதாரணம். ஏனெனில் போனார்கள்,படித்தார்கள்,  வந்தார்கள் என்பதோடு பாடசாலை குறித்த 'எல்லாம்' முடிந்து விடுகிறது.

பாடசாலை மாணவர்களில் பெரும்பாலானவர்கள் அதிலும் குறிப்பாக மாணவிகள்  தங்களது பாடசாலைகளில் சிறுநீர் கழிக்க, மலசலகூடத்தை பாவிக்க பயப்படுகின்றனர்‌. இதுதான் உண்மை‌. அதிலும் குறிப்பாக வயது வந்த பெண் பிள்ளைகளின் நிலை படு மோசம். சிறுநீரை வீடு வரும் வரைக்கும் அடக்கி வைத்திருக்கிறார்கள். இது  குறித்து பெற்றோர்களும், ஆசிரியர்களும், ஏன் நானும், நீங்களும் இன்னும் கவனிக்காமலே  இருக்கிறோம். நிறைய அவலங்களை கேள்விப்படுகிறோம். பார்க்கிறோம். ஆனால் ஒன்றும் செய்யவில்லை. இது தான் உண்மை‌.

ஆயிரம் இரண்டாயிரம் மாணவர்கள் படிக்கின்ற பாடசாலைகளில் கூட மாணவர்களுக்கென கழிப்பறை வசதிகள் எதுவும் இல்லை என்பது இந்த நவீன நூற்றாண்டில் மிகவும் கவலைக்குரியது. ஒரு சில பாடசாலைகளில் அந்த வசதிகள் இருந்தாலும், 'அந்த வசதிகளை' மாணவர்களால் அனுபவிக்க முடியவில்லை. ஏனெனில், அவைகள் பாவிக்கக்கூடிய நிலையில் இல்லை. இதனால் பெரும்பாலான மாணவ மாணவிகள் பாடசாலைகளில் உள்ள மலசல கூடங்களை பயன்படுத்த தயங்குகின்றனர். மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். சிலருக்கு அடிக்கடி யூரின்  இன்பெக்ஷன் கூட இதனால் ஏற்படுகிறது. 

காலை 7மணி முதல் மாலை 2மணி வரை கிட்டத்தட்ட 7-8 மணித்தியாலங்கள்  "ஒன்டுக்கும்", "இரண்டுக்கும்" போவதை மாணவர்கள் அடக்கி வைக்கிறார்கள். இதற்காக தண்ணீர் குடிக்காமல் இருக்கிறார்கள்‌. பயம். தண்ணீர் குடித்தால் யூரின் போக வேண்டி வரும் என்ற பயம். ஸ்கூல் டொய்லட்டை நினைத்தால் வரும் பயத்தில் சர்வமும் அடங்கி விடுகிறது அவர்களுக்கு. இது மிகவும் கொடுமையானது. 

ஹிட்லரின் நாஜி படைகளின் மிகப்பெரிய சித்தரவதை முகாமான 'அழகு நிலையம்" என அவர்களால் அழைக்கப்பட்ட  Auschwitz concentration campல் கொடுக்கப்பட்ட மிகப் பெரும் தண்டனை அவர்களது டொய்லட்கள் தான். 32000 கைதிகளுக்கு ஒரு டாய்லட். அதுவும் சுத்தம் செய்யப்படாத டொய்லட். ஒரு மனிதனுக்கு கொடுக்க கூடிய இதைவிட பெரிய தண்டனை வேறு எதுவும் இல்லை என்பதாக வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்கிறார்கள். அவர்கள் அதை அழகு நிலையம் என்று அழைத்தார்கள். அது போல் நாங்களும் அதை சில வேளைகளில்  "பாடசாலைகள்" என்று அழைக்கிறோம். 

இது குறித்து நாங்கள் போதிய கவனக் குவிப்பு செய்ய வேண்டும். வரும் புது வருடத்திலாவது நாங்கள் இதில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். மாணவர்கள், மாணவிகள் வெளியில் சொல்ல முடியாமல் படும் அவஸ்தைகள் குறித்து உங்கள் குழந்தைகளோடு, உங்கள் மாணவர்களோடு, தம்பி தங்கைகளோடு கொஞ்சம் மனம் விட்டு பேசிப் பாருங்கள். ஆயிரம் கதைகள் வெளியே வரும். கஷ்டங்கள் புரியும். தீர்வுகள் விரைவாக வரும். அதற்கான ஆரம்ப புள்ளியாய்‌ இந்த பதிவு அமையட்டும்.

இந்த பிரச்சினை இருக்கிறது என்பது பலருக்கும் புரியாமல் இருப்பது தான் இதில் உள்ள மிகப்பெரிய பிரச்சினை. புரிந்து கொண்டால் தீர்வு மிகவும் எளிதானது. குறைந்தது பாடசாலையில் உள்ள ஒவ்வொரு செக்ஸனுக்கும் அல்லது  ஒவ்வொரு கட்டிடத்திற்கும் (Block) ஒரிரு டொயலட்களை கட்டுவது. அதை ஒழுங்காக பராமரிப்பது. நாளாந்த சுத்தகரிப்பை கிரமமாக மேற்கொள்வது. அதற்காக, பொறுப்பாக -ஆசிரியர் -மாணவர் பெற்றோர் குழுக்களை அமைப்பது. அவ்வளவுதான். 

Dr PM Arshath Ahamed MBBS MD PAED

குழந்தை நல மருத்துவர் ‌.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe