சீன வெளியுறவு அமைச்சரிடம் கோட்டாபய வைத்த முக்கிய கோரிக்கை.
கோவிட் தொற்றிலிருந்து இலங்கை மக்களை காப்பாற்றுவதற்காக சீனாவினால், பொருட்கள் மற்றும் நிதி உதவிகள் வழங்கப்பட்டமைக்கு ஜனாதிபதி, சீன வெளிவிவகார அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சீனாவின் நெருங்கிய நட்பு நாடு இலங்கை என நினைவுப்படுத்தி சீன வெளிவிவகார அமைச்சர், இலங்கைக்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் உதவி வழங்குவதாகவும் கூறியுள்ளார்.
சுற்றுலாத்துறைக்காக இலங்கை திறக்கப்பட்டுள்ளதாக கூறிய ஜனாதிபதி, சீன சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் வருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவிட் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு, கடனை மீளச் செலுத்துவதை மறுசீரமைப்பது குறித்து அவதானம் செலுத்த இயலுமானால், அது நாட்டிற்கு பாரிய பங்களிப்பாக இருக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கூறியுள்ளார்.
அத்துடன், சீனாவினால் முன்னெடுக்கப்படும் இறக்குமதி நடவடிக்கைகளின் போது, நிவாரண அடிப்படையிலான வர்த்தக கடன் நடைமுறையொன்றை பெற்றுக்கொள்ள முடியுமாயின், தடையின்றி தொழிற்சாலைகளை நடத்திச் செல்ல அது உதவியாக இருக்கும் என ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சரிடம் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதை அடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சீனாவிற்கு பயணம் மேற்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.