சாய்ந்தமருது பகுதியில் அண்மைக்காலமாக வீசும் துர்நாற்றத்தை உடன் கட்டுப்படுத்த - கல்முனை மாநகர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முகா பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் கேட்டுக் கொண்டுள்ளார்.
துர்நாற்றம் ஏற்படுவதற்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். காரணமான நபர் அல்லது நபர்கள் முகாவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பின்வாங்கக் கூடாது என்றும் யஹியாகான்- கல்முனை மாநகர முதல்வரிடம் வேண்டிக் கொண்டுள்ளார்.
சாய்ந்தமருது துர்நாற்ற விவகாரம் தொடர்பாக முதல்வரின் அறிக்கையை அவதானித்ததன் பின்னர் - யஹியாகான் மேலும் தெரிவித்துள்ளதாவது ;
சாய்ந்தமருது மக்கள் மிகவும் கடுமையான துர்நாற்றத்தை தற்காலத்தில் எதிர் நோக்கி வருகின்றனர். கடந்த இரு வாரங்களாக நான் சாய்ந்தமருதில் இருந்தபோது இதனை நன்கு உணர முடிந்தது. இது மிகப் பெரும் நோயை உண்டாக்கும் துர்நாற்றமாகவே மக்கள் பார்க்கின்றனர்.
கல்முனை முதல்வர் - தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைப் போன்று கனகச்சிதமாக ஆய்வு செய்து - துர்நாற்றத்துக்கான காரணத்தை கண்டறிந்து உரியவர்கள் மீது தயவு தாட்சன்யமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றும் யஹியாகான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.