இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்தன, எரிபொருள் நெருக்கடி காரணமாக பிறந்து 02 நாட்களே ஆன சிசு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது நிர்வாகத்தை கடுமையாக சாடியுள்ளார்.
இலங்கையில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக உரிய நேரத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படாமையால் பிறந்து 02 நாட்களே ஆன சிசுவொன்று உயிரிழந்துள்ளதாக தியத்தலாவை வைத்தியசாலையின் வைத்தியர் ஷனக ரொஷான் பத்திரன தெரிவித்திருந்தார்.
குழந்தைக்கு இரத்த ஓட்டத்தில் சர்க்கரை அளவு குறைந்து, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. குழந்தையின் தந்தை குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முச்சக்கரவண்டிக்கு போதிய பெற்றோல் இல்லாததால், சுமார் ஒரு மணித்தியாலம் எரிபொருளைத் தேடிச் சென்றுள்ளார்.
இறுதியாக தந்தை எரிபொருளைக் பெற்றுக் கொண்டு, குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வீடு வந்தபோது குழந்தையின் இரத்த ஓட்டத்தில் உள்ள சர்க்கரையின் அளவு 22 mg/dl ஆகக் குறைந்து அக் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது மூச்சு விட முடியாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், தியத்தலாவை மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் (ETU) சிசு உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியர் கூறியிருந்தார்.
குறித்த நேரத்தில் குழந்தையை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு போதுமான எரிபொருளை குழந்தையின் தந்தையால் பெற்றிருந்தால் சிசுவை காப்பாற்றியிருக்க முடியும் எனவும் வைத்தியர் பத்திரன தெரிவித்திருந்தார்.
இச் சம்வம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த மஹேல ஜயவர்தன, ஒரு தந்தை என்ற ரீதியில் இந்த தருணத்தில் பெற்றோர் படும் துன்பங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. சிசுவின் மரணத்திற்கு பொறுப்பேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது நிர்வாகமும் உடனடியாக பதவி விலக வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் டுவீட் செய்துள்ள மஹில "ஒரு தந்தையாக, கோத்தபாய ராஜபக்ஷ இந்தத் தகவலைப் படித்து, ஏதேனும் குற்ற உணர்ச்சியுடன் இருந்தால், இந்த நிலைமைக்கும் இந்த நிர்வாகத்தில் அங்கம் வகித்த அனைவருக்கும் அவர் நேரடியாகப் பொறுப்பேற்று உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.