பாறுக் ஷிஹான்
வைத்திய அதிகாரியுடன் குடும்பப்பெண் வைத்தியசாலை தங்குமிட அறையில் தனிமையில் இருந்ததாகத் தெரிவித்து பதற்ற நிலை ஏற்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (27) மாலை 3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,
கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றி இடமாற்றம் செல்லவிருந்த 36 வயதுடைய வைத்தியர் இரத்தினபுரி மாவட்டம், பெல்மதுளை பகுதியைச்சேர்ந்தவர்.
கடந்த காலங்களில் இவ்வைத்தியசாலையில் கதிரியக்கவியல் (Radiologist Specialist) விசேட வைத்திய நிபுணராகக் கடமையாற்றி வந்துள்ளதுடன், பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சனிக்கிழமை (28) அன்று இடமாற்றலாகிச் செல்லவிருந்தார்.
இந்நிலையில், இவ்வைத்தியருக்கு அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பகுதியைச்சேர்ந்த 28 வயதுடைய பெண்ணிற்கும் தனியார் மருத்துவ சிகிச்சை நிலையமொன்றில் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அந்த உறவு தொடர்ந்து வந்துள்ளது.
இப்பெண்ணின் கணவர் தொழில் நிமிர்த்தம் மத்திய கிழக்கு நாடொன்றில் பணியாற்றி வருவதுடன், 3 வயதில் குழந்தை ஒன்றுமுள்ளது.
மேற்படி இவ்விருவரும் சம்மாந்துறை பகுதியிலுள்ள தனியார் மருத்துவ சிகிச்சை பிரிவில் சந்தித்துள்ளதுடன், தத்தமது காதல் தொடர்பினையும் ஏற்படுத்தி கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த காலங்களில் மட்டக்களப்பு, அம்பாறை பகுதியிலுள்ள ஹோட்டல்கள், உல்லாச விடுதிகளுக்கு பயணம் செய்து இவ்விருவரும் சந்தோசமாக வாழ்ந்துள்ளனர்.
பின்னர், திடீரென வைத்தியருக்கு இடமாற்ற உத்தரவு கிடைக்கப்பெற்ற நிலையில், தான் சேவை மேற்கொண்ட கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தனக்கென வழங்கப்பட்ட தங்குமிட அறைக்கு குறித்த யுவதியை அழைத்துச் சென்றுள்ளார்.
இதன் போது வைத்தியரின் செயலை அறிந்து பொதுமக்களும் வைத்தியசாலைத் தரப்பின் சிலரும் இணைந்து தங்குமிட அறையிலிருந்த வைத்தியர் யுவதியை உடனடியாக அருகிலுள்ள பள்ளிவாசலுக்கு அழைத்துச்செல்ல வேண்டுமென வேண்டுகோள் விடுத்ததுடன், அங்கு சிறு பதற்றமும் ஏற்பட்டது.
இந்நிலையில், குறித்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரின் முறைப்பாட்டிற்கமைய சம்பவ இடத்திற்கு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சென்று வைத்தியர் மற்றும் யுவதியை பாதுகாப்பாக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் பொலிஸ் நிலையத்தில் வைத்தியர் யுவதியிடம் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில், அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
குறித்த சம்பவத்தில் தொடர்புபட்ட வைத்தியருக்கெதிராக உள்ளக விசாரணையொன்று மேற்கொள்ளப்பட்டு ஒழுக்காற்று நடவக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.