Ads Area

சவுதியில் புதைக்கப்பட்ட கணவர்; 30 நாட்களுக்கு பின்பு தகவல் அளித்த தூதரகம் - உடலை மீட்டு தருமாறு மனைவி கண்ணீர்!

 மதுரை மாவட்டம் கள்ளந்திரி அருகே தொப்புலன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டிச்சாமி (42). திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 2022 மார்ச் 9 ஆம் தேதி கம்பி கட்டும் தொழில் செய்வதற்காக  மாதம் 20,000 ரூபாய் சம்பளத்திற்கு சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார்.

கடந்த மாதம் மே 19 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு ஆண்டிச்சாமி உயிரிழந்துள்ளார். பின், அவருடைய குடும்பத்தினருக்கு மறுநாள் 20 ஆம் தேதி காலை தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவருடைய உடலை இங்கு கொண்டு வருவதற்காக அன்று மதியமே மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனைவி வேட்டச்சி மனு அளித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், உயிரிழந்தவரின் உடலை கொண்டு வருவதற்கு வெளிநாடுவாழ் தமிழர்கள் மற்றும் மறுவாழ்வு  இயக்குநரகத்திற்கு மனு அனுப்பி இருந்தார்.

இந்த நிலையில் ஒரு மாத காலமாகியும் தன்னுடைய கணவனின் உடல் மதுரைக்கு  அனுப்பவில்லை என்றும் இந்திய தூதரகத்தின் அனுமதியுடன் உடல் சவுதியில் அடக்கம் செய்யப்பட்டதாக கூறி கடந்த ஜூன் 20 ஆம் தேதி சவூதி அரேபியா தூதரகம் மூலம் இ- மெயில் வந்திருப்பதாகவும், எனவே உடலை உடனடியாக கொண்டு வருவதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குடும்பத்தினருடன் உயிரிழந்தவரின் மனைவி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்திருந்தார்.

Also Read : அடக்கொடுமையே நடுரோட்டில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த நிலை; சிக்கிய அப்பாவி இளைஞர்! 

பின் உயிரிழந்தவரின் மனைவி வேட்டச்சி செய்தியாளர்களிடம் கூறுகையில், "என் கணவர் சவுதி அரேபிராயவில் வேலை கிடைத்துவிட்டதாக கிளம்பி சென்றார், உயிரிழப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் உடல் நிலை சரியில்லாமல் தன்னுடைய அறையில் இருப்பதாக என் கணவர் கூறினார், தற்போது உயிரிழந்து ஒரு மாதம் ஆன நிலையிலும் அவருடைய உடல் இன்னும் கொண்டு வரப்படவில்லை,  உடனே அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து உடலை ஒப்படைக்க வேண்டும்" என்றார்.

மேலும், உயிரிழந்தவரின் உறவினர் சின்னா கூறும்பொழுது, " மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த 2 நாட்களில், சவுதி அரேபிய தூதரகம்  இ- மெயில் மூலம் தொடர்பு கொண்டு, இங்குள்ள ஏஜென்ட் தொடர்பு எண்ணையும் அங்குள்ள மேற்பார்வையாளர் தொடர்பு எண்ணையும் கேட்டரிந்து அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்துவிட்டதாகவும், விமான பயணச்சீட்டு வந்த பின் உடலை அனுப்புவதாக கடந்த ஜூன் 19 ஆம் தேதி தெரிவித்தனர். ஆனால், 20 ஆம் தேதி உடல் அடக்கம் செய்யப்பட்டதாக இ - மெயில் வந்தது எனவே உடலை விரைந்து கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.

மேலும், இங்குள்ள ஏஜென்ட் மதுரைவீரனிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு நாம்  கேட்கும் பொழுது, " இங்கிருந்து பல பேர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கிறார்கள், எதிர்பாராத விதமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது உடலை மாற்றி அடக்கம் செய்திருக்கலாம், இந்திய தூதரகம் கவனக்குறைவால் தான் இன்று வரை உடல் கொண்டு வர தாமதமாகிறது, உயிரிழந்தவரின் உடலை கொண்டு வர பல முயற்சி மேற்கொண்டு வருகிறேன்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்த பின் கூறுகையில், உடலை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என நம்பிக்கை அளித்ததாக தெரிவித்தனர்.

பிழைப்பிற்காக வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அரசு துரிதமாக செயலப்பட்டு, உயிரிழந்தவரின் உடலை விரைவில் ஒப்படைக்க வேண்டும் என காத்துக்கொண்டிருக்கின்றனர் குடும்பத்தினார்கள்.

செய்தியாளர் : ஹரிகிருஷ்ணன் RS




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe