பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம், கல்முனைப் பிரதேசத்தில் எரிபொருளுக்காக தினமும் மக்கள் காத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பல்வேறு எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதுடன், எரிபொருள் உரிமையாளருக்லும் பொதுமக்களுக்கும் முறுகல் நிலையும் ஏற்படுகின்றது.
இங்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ள போதிலும், மக்கள் பொறுமையைக் கடைப்பிடிக்காமையினால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
இங்குள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சுமார் 5 தொடக்கம் 10 நாட்களுக்குப் பின்னர் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படுவதுடன் ஒருவருக்கு 300 முதல் 500 ரூபாய்க்கு மாத்திரமே வழங்கப்படுகின்றது.
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அசௌகரியங்களுக்கு மத்தியில் மண்ணெண்ணெய்யைக் கொள்வனவு செய்ததையும் அவதானிக்க முடிந்தது. இது தவிர, கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பெற்றோல் வழங்கபப்பட்டது.
பொலிஸாருக்கு எரிபொருள் வழங்கப்படாமையினால் தமது கடமைகளை நிறைவேற்றுவதில் சிக்கல்களை எதிர்கொண்டு வந்ததைய்டுத்து, ஒரு வாரத்தின் பின்னர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து அவர் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இதனையடுத்து, அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்களைப் பணித்ததற்கமைய இங்குள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸாருக்கு பெற்றோல் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதே போன்று, இம்மாவட்டத்தில் எவ்வித தங்குதடையுமின்றி அரச உத்தியோகத்தர்களுக்கு பெற்றோல் வழங்கப்பட்டு வருகின்றது.
மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டலில் பிரதேச செயலக ரீதியாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பிரதேச செயலாளர்களினால் அட்டைகள் வழங்கப்பட்டு குறித்த அட்டைகளுக்கு பெற்றோல் விநியோகிக்கப்படுகின்றது.
இதனால் இங்குள்ள பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பல அரச திணைக்களங்களிலும் கடமை புரியும் உத்தியோகத்தார்கள் மிக நீண்ட வரிசைகளில் நின்று பெற்றோலைப் பெற்றுக் கொண்டுள்ளனர். மேலும், இங்குள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுடான டீசல் விநியோகமும் மேற்கொள்ளப்பட்டது.
சுமார் ஒரு கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரத்தில் மிக நீண்ட வரிசையில் வாகனங்களுடன் மக்கள் காத்து நின்று டீசலைப் பெற்றுக்கொண்டனர்.
அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பெற்றோலைப் பதுக்கி வைத்திருப்பதாகத் தெரிவித்து பொது மக்கள் சிலர் வெள்ளிக்கிழமை (24) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு வந்த அப்பிரதேசத்தைச்சேர்ந்த பொதுமக்கள் சிலர் பெற்றோலைப் பதுக்கி வைத்திருப்பதாகவும் அதனை பொது மக்களுக்கு விநியோகிக்குமாறும் கூறினர்.
பின்னர் உரிமையாளருடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு சீராக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக அம்பாறை மாவட்டத்தில் எரிபொருள் தேவை அதிகரித்துள்ளதுடன், மக்கள் நீண்ட வரிசைகளில் பல மணி நேரமாகக் காத்திருந்து எரிபொருட்களைப் பெற்றுச்செல்கின்றனர்.
கல்முனை, சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை, மருதமுனை, கல்முனைப் பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குறிப்பிட்ட எரிபொருட்கள் விநியோகிக்கப்படுமென பொற்றோலியக் கூட்டுத்தாபனம் முன்கூட்டியே அறிவித்து வருகின்ற நிலையில், அதிகாலை 3 மணி தொடக்கம் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
அதன் போது, அனைவருக்கும் எரிபொருட்களைப் பகிர்ந்தளிக்குமுகமாக சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 1000 முதல் 2000 ரூபாய்க்கே எரிபொருட்கள் வழங்குகின்றது.
அதனால் பல மணி நேரக்காத்திருப்பின் பின்னரும் மக்களுக்கு 2 முதல் 3 லீட்டர் வரையான எரிபொருட்களே பெற முடிந்துள்ளதாக குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இது தவிர, வேளாண்மை அறுவடை விவசாயிகள் மற்றும் மீனவர்களும் எரிபொருட்களைச் சீராகப் பெற்றுக்கொள்ள சிரமப்படுவதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.