பசியுடன் ஒருவரும் வாடக்கூடாதென்ற உயர்ந்த எண்ணத்தில் துபாய் முழுதும் ஆங்காங்கே சூடான ரொட்டியை இலவசமாக அளிக்கும் ‘வெண்டிங்' இயந்திரங்களை அந்நாட்டு அரசு நிறுவியுள்ளது.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், வெளிநாடுகளிலிருந்து வந்து பணி புரிவோர் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் கட்டட வேலை, கார் மற்றும் கனரக வாகன ஓட்டுனர்கள், வினியோக ஊழியர்களாகப் பணியாற்றுகின்றனர்.
குடும்பத்தினருக்கு பணத்தை சேமிப்பதற்காக இவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மூன்று வேளை சாப்பிடாமல் பட்டினியுடன் நாட்களை கழிக்கின்றனர்.
இந்நிலையை மாற்ற வேண்டுமென ஐக்கிய அரபு எமிரேட்சின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் கடந்தாண்டு தெரிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக துபாயில் இலவச உணவளிக்கும் 'வெண்டிங் மிஷின்' எனப்படும் தானியங்கி இயந்திரங்களை நகரின் பல்வேறு பகுதிகளிலும் அவர் நிறுவியுள்ளார்.
இந்த உணவு இயந்திரங்கள் கடந்த 17ம் திகதி முதல் செயற்பாட்டுக்கு வந்தன. துபாயின், 'அஸ்வாக்' மளிகைக் கடைகளின் வாயிலில் இவ்வியந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதில், அரபி ரொட்டி மற்றும், 'பிங்கர் ரோல்' ஆகிய இரண்டு வகை உணவுகள், சுடச்சடத் தயாரிக்கப்பட்டு ஒரு நிமிடத்தில் அளிக்கப்படுகின்றன.
இந்த இலவச உணவுத்திட்டத்துக்கு தனி நபர்களும் நன்கொடை அளிக்கலாமென துபாய் அரசு தெரிவித்துள்ளது.
Khaleejtimes