Ads Area

எல்லைநிர்ணய ஆணைக்குழுவின் ஆயுட்காலத்தை நீடிக்குமாறு ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி அரசுக்கு கோரிக்கை.

 நூருல் ஹுதா உமர்


பல்லினம் வாழும் இலங்கை தேசத்தில் இனங்களுக்கிடையிலும், பிரதேசங்களுக்கிடையிலும் நிறைய எல்லை பிரச்சினைகளும், வட்டார பிரிப்பு முரண்பாடுகளும், உள்ளுராட்சி மன்ற கோரிக்கை விடயங்களும் இருக்கின்றமையினால் அவற்றை தீர ஆராய்ந்து தீர்வை வழங்கும் விதமாக விரைவில் முடிவுக்கு வர இருக்கும் எல்லைநிர்ணய ஆணைக்குழுவின் ஆயுட்காலத்தை இன்னும் சில காலத்திற்கு நீடிக்குமாறு ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை போன்றோருக்கு எழுத்துமூலம் கோரியுள்ளதாக ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் தலைவர் கலாநிதி அன்வர் முஸ்தபா தெரிவித்தார்.

அண்மையில் வெளியான தேர்தல் ஆணைக்குழுவின் ஊடக வெளியீட்டை அடுத்து ஞாயிற்றுக்கிழமை (04) இரவு இடம்பெற்ற அக்கட்சியின் அரசியல் நிறைவேற்று குழு கூட்டத்தை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்,

நாட்டினுடைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதி முன்வைத்திருக்கும் வரவுசெலவு திட்டம் மக்களுக்கு சுமையாக அமைந்திருந்திருந்தாலும் கூட நாட்டின் இன்றைய நிலையில் இப்படியான வரவுசெலவு திட்டம் தான் தயாரிக்க முடியும் என்ற நிலை இருக்கிறது. அரை நூற்றாண்டு அரசியல் அனுபவம் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்காலத்தில் சர்வதேச நாடுகளுடன் உறவை வலுப்படுத்தி இயற்கையினால் ஆசிர்வதிக்கப்பட்ட சகல வளமும் மிக்க எமது நாட்டில் முதலீடு செய்யும் விதமாக முதலீட்டாளர்களை கவர்ந்து நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண வேண்டும். அதற்கு ஒத்திசைந்ததாக எங்களின் ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி ஜப்பான் அரச குடும்ப பிரதிநிதிகள் அடங்களாக ஜப்பானிய முதலீட்டாளர்களை அண்மையில் நாட்டுக்கு அழைத்துவந்து ஜனாதிபதி, பிரதமர் போன்றோர்களுடன் தொடர்பை உருவாக்கி இலங்கையில் முதலீடுகளை செய்யும் வாய்ப்பை உருவாக்கியுள்ளோம்.

நாட்டின் இன்றைய பொருளாதார சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் போட்டி, பொறாமை, அரசியல் சூழ்ச்சிகள், ஆட்சி கதிரைக்கான போட்டிக்கான விடயங்களை ஓரங்கட்டிவிட்டு நாட்டை வலுப்படுத்த முறையான வேலைத்திட்டங்களை ஒன்றித்து செய்ய முன்வர வேண்டும். நாட்டில் புரையோடிபோகியுள்ள போதைவஸ்து பாவனையை கட்டுப்படுத்த தேவையான உயர்மட்ட முன்னெடுப்புக்களை செய்ய எங்களின் கட்சி துரிதகதியியிலான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். ஜனநாயகவழியில் ஏதாவது ஒரு ஏற்பாடுகளை கொண்டு உள்ளுராட்சி மன்ற தேர்தலையாவது அரசாங்கம் நடத்த முன்வரவேண்டும் என்றும் இவ்வேளையில்  கேட்டுக்கொள்கிறேன் என்றார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe