பாறுக் ஷிஹான்
ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம், பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்புப் பகுதியில் அமைந்துள்ள வாகன புகை பரிசோதனை நிலையத்திற்கு முன்னால் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இளைஞன் குறித்து கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது.
இதற்கமைய நேற்று மாலை சம்பவ இடத்திற்குச்சென்ற கல்முனை விசேட அதிரடிப்படையினர் பெரிய நீலாவணை பகுதியைச்சேர்ந்த 35 வயதான சந்தேக நபரைக்கைது செய்ததுடன், சந்தேக நபரது உடமையிலிருந்து 1 கிராம் 80 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.
கைதான சந்தேக நபர் பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நீண்ட காலமாக ஐஸ் வியாபாரத்தை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு முன்னெடுத்து வந்துள்ளமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இச்சோதனை நடவடிக்கையின் போது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை மாவட்ட பதில் கட்டளை அதிகாரியும் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான நளீன் பெரேரா ஆகியோரின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் கட்டளையதிகாரி டி.சி வேவிடவிதான ஆகியோரின் அறிவுறுத்தலுக்கமைய கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்னாயக்க மேற்பார்வையில் உப பொலிஸ் பரிசோதகர் எச்.ஜி.பி.கே நிஸ்ஸங்க உள்ளிட்ட பொலிஸ் சார்ஜன்ட் பண்டார (13443), பொலிஸ் கன்டபிள்களான அபேரட்ண (75812), நிமேஸ் (90699), ஜயவர்த்தன (94155), சாரதி குணபால (19401) உள்ளிட்ட அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரைக்கைது செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்களுடன் பெரிய நீலாவணை பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன், விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.