பாறுக் ஷிஹான்
பல கடவுச்சீட்டுக்களை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபரொருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான அரச பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நபரொருவர் பல நபர்களிடம் கடவுச்சீட்டுக்களைப் பெற்று வருவதாக பொலிஸ் விசேட பிரிவுப்பொறுப்பதிகாரிக்கு தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது.
வியாழக்கிழமை (23) இதற்கமைய சம்பவ இடத்திற்கு கல்முனை தலைமையக பொலிஸார் வருகை தந்து சுற்றி வளைத்து தேடுதலை மேற்கொண்டனர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டம், ஆரையம்பதி பகுதியைச்சேர்ந்த 51 வயது மதிக்கத்தக்க மைக்கல் மணிமேகலன் என்பவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு எனக்கூறி சிலரிடம் பெற்றுக்கொண்ட கடவுச்சீட்டுக்களுடன் கைதானார்.
இவ்வாறு கைதான நபர் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறித்த நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் வங்கி கணக்கினூடாக பலரிடம் பணக்கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
மேலும், சந்தேக நபர் வசமிருந்த கடவுச்சீட்டுக்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
இவ்வாறு வரவழைக்கப்பட்டவர்கள் அனைவரும் நற்பிட்டிமுனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், தமது கடவுச்சீட்டுக்களை சந்தேக நபரிடம் மத்திய கிழக்கு வேலைவாய்ப்பிற்காக வழங்கியதாகவும் அதற்காக சந்தேக நபரின் வங்கி கணக்கிற்கு பெருந்தொகையான பணத்தை வைப்பிலிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
இதன் போது, அடுத்து கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.டி.எம்.எல்.புத்திக வழிநடத்தலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்ஷீன் பக்கீர் ஆலோசனையில் கல்முனை குற்றப்புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் தலைமையில் பொலிஸ் குழுவினர் இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதுடன், கைதான சந்தேக நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக அனுப்புகின்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரா? அல்லது இடைத்தரகரா? என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.