பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பின் காரணமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு, அங்குள்ள மீனவர்களும் தொழில் நடவடிக்கைகளில் பெரிய இடர்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்
குறிப்பாக, மருதமுனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை நிந்தவூர், ஒலுவில், பொத்துவில் போன்ற பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு, காற்றின் திசை மாற்றம், நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள திசை மாற்றம், கடல் நீரின் தன்மை வழமைக்கு மாறாக குளிர்ச்சியாக காணப்படுகின்ற காரணங்களால் கடலலைகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதினாலும் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் தொடங்கி நிந்தவூர், காரைதீவு வரையிலான பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடலரிப்பின் காரணமாக 400 மீட்டர் வரையிலான நிலப்பகுதிக்குள் கடல் புகுந்துள்ளதாகவும் கடந்த சில தினங்களாக கடலரிப்பு ஏற்பட்டு வருகின்றமையினால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காரைதீவு, நிந்தவூர் கரையோரப்பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடலரிப்பு அதிகரித்து வருகின்றமையினைத் தடுக்க நிரந்தரமாக கடலரிப்பு தடுக்க நடவடிக்கை முன்னெடுக்க பல்வேறு தரப்பினரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
எனினும், அம்பாறை மாவட்டத்தின் கரையோரைப் பிரதேசங்களில் இவ்வாறு கடலரிப்பு தீவிரமடைவதற்கு ஒலுவில் பிரதேசத்தில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையே பிரதான காரணமென அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

