Ads Area

நல்ல தண்ணிக்கே திண்டாட்டம்.. பலரும் அறியாத துபாயின் மறுபக்கம்..!

 உலகிலேயே மிக உயரமான கட்டிடம், தனித்துவம் வாய்ந்த சாலைகள், போக்குவரத்து வசதிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள், எண்ணெய் வர்த்தகம் மற்றும் தனிச்சிறப்புடைய சுற்றுலாத்தலங்கள் என பல்வேறு விதத்திலும் இன்று தனித்து விளங்கும் துபாய் நகரமானது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு இருந்தது என்பதைப் பார்த்தால் காண்பவர்கள் வியப்பில் ஆழ்த்தப்படுவார்கள் என்பது உறுதி. அந்த புகைப்படங்களைக் காணும்போது துபாய் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது என்பதை உணர முடிகிறது.


துபாய் கலாச்சாரம் மற்றும் கலை ஆணையம், துபாயில் உள்ள ஜப்பான் துணைத் தூதரகத்தின் ஒத்துழைப்புடன், அல் சஃபா கலை மற்றும் வடிவமைப்பு நூலகத்தில் மார்ச் 17 வரை கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, இது UAE உடனான இராஜதந்திர உறவுகளை நிறுவியதன் 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனவே, இந்த கண்காட்சியில் சுமார் 60 ஆண்டுகள் பழமையான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 1960களில் துபாயில் பள்ளி மாணவர்களை பிக்அப் டிரக்குகள் ஏற்றிச் செல்வது, பெரியளவில் பாதுகாப்பு இல்லாத எளிய பெட்டிகளில் நகைகளை வைத்துள்ள நகைக் கடைகள், பனை ஓலைகளால் ஆன ‘அரீஷ்’ எனப்படும் குடிசை வீடுகள் போன்றவற்றை புகைப்படங்களில் காணலாம். மேலும், இந்த புகைப்படங்களை ஒரு ஜப்பானிய பத்திரிக்கையாளரான Yoshio Kawashima மத்திய கிழக்கிற்கு அவரது சக ஊழியரான Hiroshi Kato என்பவருடன் பயணித்தபோது எடுத்த 25 புகைப்படத்தின் ஒரு பகுதி என்று கூறப்பட்டுள்ளது.

அந்த காலகட்டத்தில் நல்ல தண்ணீர் என்பது அனைவருக்கும் பெரிய ஆடம்பரமாக இருந்துள்ளது என்பதை நாம் காணும் இந்த புகைப்படத்தின் மூலமாக நம்மால் உணர முடியும். பாலைவனத்திற்கும் கடலுக்கும் மத்தியில் வாழ்ந்து வந்த அந்த மக்கள் தங்களின் நிலப்பகுதியில் நல்ல தண்ணீர் நிரம்பியதும் அவர்களின் முகங்களில் மகிழ்ச்சி வெளிப்படுவது இந்த புகைப்படங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


‘துபாய் இன் தி இயர் 1962’ என்ற தலைப்பில் உள்ள புகைப்படக் கண்காட்சியானது, அல் ஃபஹிதி கோட்டையைச் சுற்றியுள்ள மக்களையும் வாழ்வியல் சூழலையும் எடுத்துக்காட்டியுள்ளது.மற்றொரு புகைப்படத்தில், மக்கள் பர் துபாயை நோக்கி ஒரு ஆப்ராவில் சிற்றோடையைக் கடப்பதைக் காணமுடிகிறது. ஆப்ரா என்பது ஒரு வகையான போக்குவரத்து முறையாகும். அதுபோல, கோபுரங்கள் நிறைந்து காணப்படும் ஒரு பாரம்பரிய கட்டிடக்கலை அமைப்பு இருப்பதையும் புகைப்படத்தில் பார்க்கலாம்.

அதுமட்டுமின்றி, கண்காட்சியில் உள்ள கருப்பு-வெள்ளை புகைப்படங்களானது, மறைந்த ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் அவர்களையும் துபாய் மக்களையும் ஒன்றிணைத்த அவரது மஜிலிஸில் அவர்களுடனான தினசரி சந்திப்புகளையும் வெளிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த புகைப்படத்தின் தலைப்பு அப்போதைய துபாய் ஆட்சியாளர் உண்மையான ஞானம் மற்றும் தொலைநோக்கு மனிதர் என்று குறிப்பிட்டுள்ளது

அதுபோல, அடுத்துள்ள புகைப்படங்களில், ஒரு நகைக் கடையில் வைக்கப்பட்டுள்ள மறைந்த ஷேக் ரஷீத்தின் உருவப்படம், மசூதிக்கு அருகில் விளையாடச் செல்லும் சகோதரர்கள், ஷார்ஜாவின் RAF விமான நிலையத்தில் கவாஷிமாவை ஏற்றிச் செல்லும் விமானம், அல் ஷிந்தகாவில் உள்ள அல் ஷாப் பள்ளியில் உள்ள வகுப்பறை, தனது பொருட்களின் மீது அமர்ந்திருக்கும் ஒரு கடைக்காரர் மற்றும் தன் பருந்துடன் பெருமிதமாக நடக்கும் நபர் என பல்வேறு விதமான காட்சிகளையும் படைப்பாற்றல் மிக்க கவாஷிமா படம்பிடித்துள்ளார்.


மேலும் இது குறித்து ஹலா பத்ரிஅவர்கள் பேசுகையில், ஜப்பானிய புகைப்படக் கலைஞரான கவாஷிமாவின் திறமையை கண்காட்சி வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் துபாயின் வரலாற்றின் முக்கியமான தருணங்களை அவர் ஆவணப்படுத்தியுள்ளதாகவும் ஹலா பத்ரி தெரிவித்துள்ளார்.

Thanks-khaleejtamil








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe