நூருல் ஹுதா உமர்.
கிழக்கு மாகாணம் சம்மாந்துறையைச்சேர்ந்த கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) தேசமாண்ய ஆதம்பாவா மன்சூர் அவர்களின் 39 வருட கால அரச சேவையைப் பாராட்டிக் கௌரவிக்கும் விழாவும் அவர் பற்றிய "மன்சூர் எனும் நிருவாக ஆளுமை" நூல் வெளியீடும் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) மாலை சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் அதிக மக்கள் வெள்ளத்தின் மத்தியில் அரச உயரதிகாரிகளின் பங்குபற்றலுடன் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.
சம்மாந்துறை சாதனையாளர்களை வாழ்த்தும் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அவ்வொன்றியத் தலைவரும், நிர்வாக கிராம நிலதாரியுமான எம்.எல்.தாஸீம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடாதிபதி அரசியத்துறை பேராசிரியர் எம்.எம்.பாஸில், கிழக்கு மாகாண பேரவைச்செயலாளர் எம்.எம்.நஸீர், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளர் எம்.கோபாலரத்னம், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (ஆளணி), திருமதி ஆர்.யூ.ஏ.ஜலீல், இராஜாங்க அமைச்சின் முன்னாள் செயலாளரும், எல்லை நிர்ணயக்குழு உறுப்பினருமான எம்.ஐ.எம். அமீர், முன்னாள் வவுனியா அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா, இலங்கை பொதுச்சேவை ஆணைக்குழு முன்னாள் உறுப்பினரும், அமைச்சின் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம், ஓய்வுபெற்ற கிழக்கு மாகாண சுகாதார அமைச்சி செயலாளர் ஏ.எச்.எம். அன்ஸார், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.பீ.எம்.வாஜித், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளருமான ஐ.எல்.எம்.மாஹிர் உட்பட அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் பணிப்பாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், வைத்தியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல உயரதிகாரிகள், கல்விமான்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் அடங்களாக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அதிதிகளினால் கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் தேசமாண்ய ஆதம்வாவா மன்சூர் அவர்களின் 39 வருட கால அரச சேவையைப் பாராட்டி உரையாற்றியதுடன், அம்பாறை மாவட்ட பல்வேறு சிவில் அமைப்புகள், முக்கியஸ்தர்கள், சம்மாந்துறை பொது அமைப்புக்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்கள் வழங்கிக் கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் முக்கியஸ்தர்கள் பலரின் செய்தி அடங்கிய கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் ஆதம்பாவா மன்சூர் அவர்களின் 39 வருட கால அரச சேவையை பாராட்டிய ஆசிச்செய்திகளைக் கொண்ட "மன்சூர் எனும் நிர்வாக ஆளுமை" எனும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.



