வீட்டுத்திட்டத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரினால் ஏற்படுகின்ற பாரிய சுகாதாரச்சீர்கேடு தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பெரியநீலாவணை இஸ்லாமிக் ரிலீப் வீட்டுத்திட்டத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரினால் பாரிய சுகாதாரச்சீர்கேட்டினை மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.
இப்பிரச்சினை குறித்து ஆராயுமுகமாக நேற்று செவ்வாய்க்கிழமை (3) பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் விஜயம் செய்தார்.
கடந்த சுனாமி அனர்த்தத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட 96 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இஸ்லாமிக் ரிலீப் வீட்டுத்திட்டத்தில் 18 வருடங்களாக முறையான வடிகான் இன்மையால் சமையலறை, குளியலறைக் கழிவுநீர் மற்றும் மலசலகூட கழிவுகள் போன்றவை வீட்டுத்திட்டத்தின் பின்புறங்களில் தேங்கி நின்று பாரியளவிலான நுளம்புகளைப்பெருக்கி நோய்களை ஏற்படுவதை நிரந்தரமாக தடுக்கும் பொறிமுறையை உருவாக்குவது தொடர்பாக ஆராயப்பட்டது.
குறித்த கள விஜயத்தின் போது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜய பத்ம, கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திரு.எச்.பி.அனிஸ் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பிரசன்னமாக இருந்தனர்.