பாறுக் ஷிஹான்.
அம்பாறை மாவட்டத்தின் கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்புக் காரணமாக பாரிய அலைகளினால் கடற்கரைப்பிரதேசம் காவு கொள்ளப்படுவதனால் மீனவர்களும் பிரதேச குடியிருப்பாளர்களும் சொல்லொன்னா துயரங்களுக்குள்ளாகி வருகின்றனர்.
கடற்கரைப்பிரசேத்திலுள்ள பயன்தரும் தென்னை மரங்கள் கடலரிப்பினால் தரையில் வீழ்ந்து காணப்படுவதுடன், தென்னந்தோட்டங்களைப் பராமரித்து வருவோர் பெரும் நஸ்டத்தை எதிர்நோக்கி வருகின்றது.
மீனவர்கள் தாம் ஓய்வெடுப்பதற்கும் தமது தோணி, படகு, மீன்பிடி வலை என்பவற்றை திருத்துவதற்காகப் பயன்படுத்தும் இயற்கையான நிழலும் இல்லாமல்போயுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.
கடற்கரைப்பிரதேச மீனவர்கள் தமது தோணி மற்றும் படகுகளையும் நிறுத்திவைப்பதற்கு தற்போது போதிய இடவசதியும் தமது மீன்பிடி உபகரணங்களை பாதுகாத்து வைப்பதற்கான மீன்வாடிகளும் இல்லாமலிருப்பது தமக்கு பெரும் கவலையளிப்பதாகவும் இந்நிலைமை ஏற்படுவதற்கு ஒலுவிலில் அமைக்கப்பட்டுள்ள மீன்பிடித்துறைமுகமும் ஒரு காரணமாகும் என பிரதேச மீனவர்கள் மேலும் தெரிவித்தனர்.
தற்போது கடலரிப்பைத்தடுப்பதற்கான தடுப்புக்கல் இடும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறாக, தொடர்ச்சியாக கடலரிப்பினால் கடற்கரைப்பிரதேசம் காவு கொள்ளப்படுமேயானால் எதிர்காலத்தல் இப்பிரதேசத்தில் கடற்கரையொன்று முழுமையாக இல்லாமற்போகும் என்ற அச்சம் இப்பிரதேச்சமக்களிடையே அதிகரித்துள்ளது.