சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை ஏற்பாடு செய்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு பிராந்திய சுகாதார பணிமனை வளாகத்தில் நேற்று (27) மாலை இடம் பெற்றது .
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை வரலாற்றில் முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, பசியையும் தாகத்தையும் உணர்பவனே ஏழைகளுக்கு மனமார உதவுவான் என்றும், நல்லிணக்கம் நாவினால் மட்டுமன்றி உணர்வோடு ஒன்றிணைந்து வெளிப்படுத்தும் விதமாக நடைபெற்றது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் குடும்ப சகிதம் பங்கேற்றதுடன், மட்டக்களப்பு நகர இஸ்லாமிய வர்த்தக பிரமுகர்கள், பொது மக்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இவ் இப்தார் வைபவம் தமிழ், முஸ்லிம் மக்களிடையே இன நல்லுறவு மற்றும் புரிந்துணர்வை வலுப்படுத்துவதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..