பாறுக் ஷிஹான்.
புலனுறுப்புகளால் மெய்சிலிர்க்கும் சாகசம் புரிந்து சர்வதேச சோழன் உலக சாதனைப்புத்தகத்தில் இடம்பிடித்த இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாரை மாவட்டம், சாய்ந்தமருதைச்சேர்ந்த எம்.எஸ். எம்.பர்சான் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப்பினால் வெள்ளிக்கிழமை (23) இரவு அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை தனியார் விருந்தினர் விடுதியில் வைத்து கௌரவிக்கப்பட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்ததாக உலகின் 26 நாடுகளில் வியாபித்திருக்கும் சர்வதேச சோழன் உலக சாதனைப்புத்தக நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் முன்னிலையில் எம்.எஸ்.எம்.பர்சானினால் புலனுறுப்புகளால் புரியப்பட்ட சாதனைகளை உலக சாதனையாளர்களைப்பதியும் சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்தார்.
இவர் கண், காது, மூக்கு, வாய் ஆகிய புலனுறுப்புகளால் அபார சாதனையை மேற்கொண்டு பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துவதுடன், காதினால் பலூனை ஊதி உடைத்தல், கண்களினால் இரும்புக்கம்பியினை வளைத்தல், பல்லினால் 5.7 கிலோ கிராம் பாரத்தினை சங்கிலிகளின் உதவியுடன் உயர்த்துதல், குளிர்பானத்தை முக்குத்துவாரத்தினூடாக அருந்துதல், மூக்குத்துவாரத்தினூடாக வயரைச் செலுத்தி வாயினூடாக எடுத்து மின் குமிழை எரியச் செய்தல், பல்லினால் தேங்காய் உரித்தல் போன்ற செயற்பாடுகளை 12 நிமிடத்தில் மேற்கொண்டு சர்வதேச சோழன் உலக சாதனைப்புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
சர்வதேசம் சென்று சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் பெயரைப்பதித்த சாய்ந்தமருது பர்ஷான் இச்சாதனை மூலம் தாய் நாட்டுக்கும், பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்ததையிட்டு பாராளுமன்ற உறுப்பினருடன் கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் எம்.ஐ.ரனூஸ், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எச்.அப்துல் றஹீம், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உதவித்தவிசாளர் ஜாஹிர், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எஸ்.முபாரக், சதக்கத்துல்லா மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் பிரதேச இணைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கௌரவித்து வாழ்த்துக்களைத்தெரிவித்துக் கொண்டனர்.