2024 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகளுகிடையிலான முஸ்லிம் கலாச்சார போட்டிகளின் வலயமட்ட போட்டிகள் இன்று சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில், இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் ஏ.ஜே.எம்.அஷ்ரப் (பலாஹி) அவர்களின் தலைமையில் அல் மர்ஜான் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் அடிப்படையில் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி கிளையின் கல்விப்பணிப்பாளர் மேஜர் என்.ரீ.நசுமுதீன் அவர்களின் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன.
முஸ்லிம் சமய கலாச்சார அழகியல் பெறுமானங்களின் ஊடாக மாணவர்களின் ஆளுமை பண்புகளை விருத்திசெய்து அதனூடாக தேசிய மற்றும் சர்வதேச தொடர்புகளை மேம்படுத்தி நற்பிரஜைகள் உருவாக்குவதற்கு பங்களிப்பு செய்தல் எனும் பிரதான நோக்கத்தில் இப்போட்டி நடைபெறுகின்றன. இந்த வகையில் சம்மாந்துறை வலயமட்ட போட்டிகள் சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபிர் அவர்களின் வழிகாட்டலில் பிரதி கல்விப்பணிப்பாளர் எச்.நைரோஸ் கான் அவர்களின் நெறிப்படுத்தலில் இஸ்லாம் பாட ஆசிரியர்களின் பூரண பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
சம்மாந்துறை வலயத்தைச் சேர்ந்த சுமார் 29 இடைநிலை பாடசாலைகளின் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் களிகம்புக்கலை மற்றும் சீனடிக்கலை, ரபான் நடனம், கிராஅத், நசீத், அதான் கூறுதல், அரபு எழுத்தனி, கஷீதா போன்ற சுமார் 28 நிகழ்ச்சிகளில் மாணவர்கள் போட்டியிட்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.