Ads Area

மத்ரஸா மாணவன் மர்ம மரணம்- மௌலவிக்கு தொடர் விளக்கமறியல்.

 பாறுக் ஷிஹான்.


மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.


குறித்த வழக்கு திங்கட்கிழமை (27) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன்  முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், மௌலவி உட்பட சிசிடிவி காணொளிகளை அழித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகிய 4 சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.


இதன் போது கடந்த தவணைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் கைதான 4 சந்தேக நபர்களை கடும் நிபந்தனையின் கீழ் பிணையில் விடுதலை செய்த நிலையில், மன்றில் ஆஜராகியிருந்தனர். 


பின்னர் இரு தரப்பினரின் வாதப்பிரதிவாதங்களின் பின்னர் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


குறித்த சம்பவத்தில் கடந்த தவணையின் போது 30, 26, 22, 23 வயது மதிக்கத்தக்க 4 சந்தேக நபர்களை   பிணையில் விடுவித்தல் தொடர்பாக சமர்ப்பணம் மற்றும் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி உட்பட ஏனைய தரப்பினரின் விடயங்களை ஆராய்ந்த நீதிவான்    நீண்ட சமர்ப்பணத்தின் பின்னர் மத்ரஸா மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் கைதான 4 சந்தேக நபர்களை தலா 10 இலட்சம் ரூபா சரீரப்பிணை, மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடுதல், வெளிநாட்டு பயணத்தடை, கடவுச்சீட்டு நீதிமன்றில் பாரப்படுத்தல்,  குறித்த வழக்கு தவணைகளில் தவறாது ஆஜராகுதல் உள்ளிட்ட பிணை நிபந்தனை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர்.


மேலும், மற்றுமொரு சந்தேக நபரான மௌலவிக்கு விளக்கமறியல் நீடிக்கபட்டு எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆந்திகதி வரை வழக்கினை ஒத்திவைக்குமாறு கல்முனை நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.


செய்தியின் பின்னணி


13 வயதுச்சிறுவன் சடலமாக மீட்பு : குர்ஆன் மதரஸா நிர்வாகி கைது - சாய்ந்தமருது பகுதியில் சம்பவம்.

 

13 வயது மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் மலசல கூடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது,சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடிக்கட்டடமொன்றில் நடாத்தப்படும் மத்ரஸா ஒன்றில் கல்வி கற்று வந்த மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடிப் பகுதியைச்சேர்ந்த மாணவன் எம்.எஸ்.முஸ்அப் (வயது-13) தூக்கில் தொங்கி  உயிரிழந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். 


மத்ரஸாவில் மஹ்ரீப் தொழுகைக்கு ஏனைய மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் மரணமடைந்த மாணவன் அங்கு காணப்படாததன் காரணமாக சில மாணவர்கள் தேடிய நிலையில் மலசல கூடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அம்மாணவன் மீட்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச  வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இதே வேளை, மரணமடைந்த மாணவனின் பெற்றோர், உறவினர்கள் தூக்கில் தொங்குவதற்கு எமது பிள்ளை கோழையல்ல எனவும், ஏதோவொன்று நடைபெற்றுள்ளதை ஊகிக்க முடிவதாகவும் முறையான விசாரணை அவசியமெனவும் கேட்டுக்கொண்டனர்.


இதனையடுத்து மத்ரஸா மாணவனின் மரணத்தில் சந்தேகமென குறித்த மத்ரஸாவினை சுற்றி பொதுமக்கள் குவிந்தமையினால் சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி  சம்சுதீன் தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று நிலமையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர்.


மேலும், குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகமிருப்பதாக பொதுமக்கள் ஒன்றுகூடி குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது தாக்குதல் மேற்கொள்ளத் தயாரான வேளை, மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில்  சாய்ந்தமருது பொலிஸாரால் மதரஸா நிர்வாகியாகிய மௌலவி கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.


இது தவிர, குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது ஏற்கனவே பல பொலிஸ் முறைப்பாடுகள் இருப்பதாகவும் மாணவனின் மரணம் தற்கொலையல்ல  எனக்கூறி பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe