(பாறுக் ஷிஹான்)
அண்மைக்காலமாக இடைநிறுத்தப்பட்ட சம்மாந்துறை குவாசி நீதிமன்றச்செயற்பாடு மீண்டும் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை குவாசி நீதிமன்றச் செயற்பாடு நீதிச்சேவை ஆணைக்குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் சம்மாந்துறை குவாஷி நீதிமன்றத்தின் பதில் குவாஷி நீதிபதியாகக் கடமையாற்ற நியமிக்கப்பட்ட அஹமட் லெவ்வை ஆதம்பாவா தலைமையில் உத்தியோகபூர்வ நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வின் சம்மாந்துறை பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் யு.எம்.அஸ்லம், சம்மாந்துறை பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் றினோசா, மனித எழுச்சி நிறுவன (HEO) பணிப்பாளர் கே.நிஹால் அகமட், சாய்ந்தமருது பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.முஸ்பிறா, HEO நிறுவனத்தின் உத்தியோகத்தர் ஜெனிற்றா, சம்மாந்துறை உலமா சபைச்செயலாளர், சம்மாந்துறை முன்னாள் குவாசி நீதிபதி எஸ்.எல்.அப்துல் சலாம், சம்மாந்துறை குவாசி நீதிமன்றச்செயலாளர் வஹாப் மற்றும் மனித எழுச்சி நிறுவன (HEO) தொண்டர்களான பாத்திமா முர்ஷிதா, மிஸ்ரியா, சாய்ந்தமருது குவாசி நீதிமன்ற உத்தியோகத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர் எம்.சி. பௌமிலாவும் கலந்து கொண்டனர்.
இதன் போது, மனித எழுச்சி அமைப்பின் (HEO) செயலாளரும் சம்மாந்துறை குவாசி நீதிமன்றின் தொண்டராகக் கடமையாற்றும் ரிபா முஹம்மட் முஸ்தபாவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
கடந்த காலங்களில் பொதுமக்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சமூக ஊடகங்களில் வெளியாகிய காணொளி காரணமாகவும் இதர குற்றச்சாட்டுக்கள் காரணமாகவும் முன்னாள் சம்மாந்துறை குவாசி நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.