Ads Area

24 மாதங்களில் வறுமையை ஒழிப்போம். சம்மாந்துறை கூட்டத்தில் சஜித் பிரேமதாச தெரிவிப்பு.

நாட்டை வங்குரோத்து அடைய செய்த தற்போதைய அரசாங்கத்தில் உள்ள தலைவர்களின் விவேகமற்ற, அக்கறையில்லாத கொள்கைகளினால் இலட்சக்கணக்கானோர் வறுமைக்கு உள்ளாகி இருக்கின்றார்கள். அவர்கள் வறுமையில் சிக்கி எல்லையற்ற அளவில் அசாதாரண நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த 18வது மக்கள் வெற்றி கூட்டம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்,ஐ.எம்.மன்சூர் தலைமையில் சம்மாந்துறையில்  வெற்றிகரமாக நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோது  சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.


தொடர்ந்து அவர் கூறுகையில், அத்தோடு வாழ்க்கைக்கான வழிகள் இன்றி தெளிவான வருமான வரிகள் இன்றி, ஒவ்வொரு நாளும் மூன்று வேளை உணவையும் பெற்றுக் கொள்ள முடியாத வறிய மக்களுக்காக ஜனசவிய, சமூர்த்தி, அஸ்வெசும மற்றும் கெமிதிரிய ஆகிய செயற்றிட்டங்களில் உள்ள சிறந்த விடயங்களை ஒன்றாக சேர்த்து, அவற்றின் குறைபாடுகளை நீக்கி, சிறந்த திட்டமொன்றை முன்னெடுப்போம்.


உணவுத் தேவை, உணவு தேவை அல்லாத வேறு தேவைகள், சேமிப்பு, நுகர்வு, முதலீடு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி போன்ற விடயங்களை கருத்தில் கொண்டும், வறுமை ஒழிப்பு திட்டத்தின் ஊடாக மாதாந்தம் 20 ஆயிரம் ரூபாய் வழங்கி, 24 மாதங்களில் வறுமையை ஒழிக்கும் தேசிய செயற்றிட்டத்தை முன்னெடுப்போம்.


யாரும் வறுமையில் இருக்கக் கூடாது. வறுமை எனும் அடிமைத்தனத்துக்கு கட்டுப்படாது. பல்வேறு நிகழ்வுகளினாலும் அரசாங்கத்தின் விவேகமற்ற, அக்கறை இல்லாத கொள்கை திட்டங்களினால் மக்கள் வறுமையில் சிக்கி இருக்கின்றார்கள். வறுமையில் இருந்துகொண்டு கையேந்துகின்ற, சமூகமொன்றை உருவாக்காது, அபிமானம் உள்ள மக்கள் வாழ்கின்ற, எமது நாட்டில் எவருடைய அடிமை சேவகர்களாக இல்லாமல் தன்னம்பிக்கையுடன், தன்னிறைவோடு எழுந்து நிற்க நம்பிக்கை உள்ள சமூகம் இருப்பதால் குறிப்பிட்ட காலத்துக்குள் வறுமையை இல்லாது செய்வோம்.


இந்த 20,000 ரூபா நிவாரணம் வழங்கப்படுகின்றபோது 24 மாதங்களில் வறுமையை ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வீட்டில் உள்ள பெண்களுக்கு இந்த சலுகைகளை பெற்றுக் கொடுத்து, வீடுகளிலேயே அனைத்து விடயங்களையும் நேர்த்தியாகவும் வளமாகவும் முன்னெடுப்பதால் அவர்களை மையமாகக் கொண்டே இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.


வறுமை என்பது சுமையல்ல நாட்டை கட்டி எழுப்புகின்ற பின்புலத்தை உருவாக்குகின்றவர் என்ற அடிப்படையில் இந்த நிவாரணங்களை வழங்குகின்றோம். பொய் இல்லாமல் இந்த செயற்றிட்டத்தை முன்னெடுப்போம்.


ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக தரமான 50 கிலோ நிறையுள்ள உர மூடையுன்றை 5000 ரூபாவிற்கு வழங்குகின்றோம். மக்களால் சகித்துக் கொள்ள முடியுமான தொகைக்கு உர மருந்துகளை வழங்குவதோடு, இருட்டடிப்பு வர்த்தகத்தை நிறுத்தவும் நடவடிக்கை எடுத்து, இவற்றை கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் ஊடாக வழங்குவோம். விவசாயிகளுக்கு, மீன்பிடியாளர்களுக்கு, சக்கர வண்டி சாரதிகளுக்கு, பாடசாலை போக்குவரத்து வழங்குனர்களுக்கும் சக்தி அரசி ஆலை உரிமையாளர்களுக்கும் நிவாரண அடிப்படையில் எரிபொருளை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கொரோனா அச்சுறுத்தல் நாட்டின் வங்கரோத்து நிலை என அனைத்து விடயங்களினாலும் விவசாயிகள் அனைத்து விதங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.


தரமற்ற உர விநியோகம், உரத் தட்டுப்பாடு, சேதன உர மோசடி என்பனவற்றினாலும் தமது தங்க ஆபரணங்களையும் சொத்துக்களையும் அடகு வைத்து விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே விவசாயிகளுடைய விவசாய கடனை நாங்கள் இரத்து செய்வோம்.


அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களின் நட்புறவாளர்கள், நண்பர்கள், பினையின்றி கடனைப் பெற்றுக்கொண்டு அவற்றை மீள செலுத்தாமல் கடன்களை இரத்து செய்திருக்கின்றார்கள். வர்த்தகர்களின் கடன்களையும் இரத்து செய்து இருக்கின்றார்கள். இவ்வாறான வர்த்தகர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்த்தாலும், இந்த வரிய எளிய விவசாயிகளின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவி சாய்க்கவில்லை.


தனது நட்புறவாளர்களுக்காக சட்டத்தை மீறி இரத்து செய்து, கொடுக்கப்பட்ட இந்தக் கடன் தொகைகள் அனைத்தையும் மீண்டும் அரசாங்கத்துக்கு பெற்றுக்கொண்டு விவசாயிகளின் கடன்களை அரசாங்கம் இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும் என்றும் இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.


அத்தோடு விவசாயிகளின் உற்பத்திகளுக்கு நிர்ணய விலை ஒன்றை பெற்றுக் கொடுப்பதோடு, பாரிய ஆலை உரிமையாளர்களின் தந்திரமான ஒப்பந்தங்களின் ஊடாக விவசாயிகளின் நெல்லை குறைந்த விலைக்கு கொள்ளையடித்து அவர்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றார்கள். 


எனவே, இந்த விவசாயிகளின் நெல்லுக்கு நிர்ணய விலையை ஏற்படுத்தி, அவர்கள் இலாபத்தை பெற்றுக்கொள்வதோடு, நுகர்வோருக்கும் தகுந்த விலையில் அரிசியை பெற்றுக் கொள்ளும் விதமாக விலைசூத்திரமொன்றை அறிமுகப்படுத்துவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்தார்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe