பாறுக் ஷிஹான்.
வீட்டில் மறைத்து வைத்து கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு இரு வேறு சந்தர்ப்பங்களில் கைதான 2 சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப்பகுதிகளில் விற்பனை செய்வதற்காக அதிகளவான கசிப்புக்கலன்களுடன் நேற்று திங்கட்கிழமை (13) அன்று 45 மற்றும் 69 வயதுடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த இரு சந்தேக நபர்கள் வசமிருந்து 23,000 மில்லி லீட்டர்கள் கசிப்பு தொகுதிகள் சம்மாந்துறை ஊழல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியிருந்தனர்.
இதன் போது, குறித்த கைதான 2 சந்தேக நபர்களும் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வருவதாக சம்மாந்துறை ஊழல் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப்பிரிவுப் பொறுப்பதிகாரி ஆர்.எம். ரணதுங்க தலைமையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் 69 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.