சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.
சுகாதாரமற்ற கிழக்கு பொரியல் உட்பட டேஸ்ட் கடைகள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களையடுத்து உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய ஸஹீலா இஸ்ஸதீன் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் தலைமையில் சென்ற சுகாதார குழுவினர் அண்மையில் (12) திடீர்ச்சோதனைகளை நடாத்தினர்.
கடந்த காலங்களில் சம்மாந்துறை பிரதேச உணவகங்கள் உட்பட டேஸ்ட் கிழங்கு பொரியல் கடைகளின் சுகாதார நடைமுறைகளைப்பேணி உணவுகளைத் தயாரிக்குமாறும் உணவங்கள் சுத்தமில்லாதிருத்தலும், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கின்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றவற்றை சுகாதார முறைப்படி பேணுமாறும் ஆலோசனை வழங்கியதுடன், அறிவித்தல்களைப் பேணி நடக்காத உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் போது, மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற முறையில் களஞ்சியப்படுத்திய மற்றும் பழுதடைந்த உணவுகளை வைத்திருந்த ஒன்பது கடை உரிமையாளர்களுக்கு எதிராக சம்மாந்துறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதன்படி, ஒன்பது கடை உரிமையாளர்களுக்கும் எதிராக 25,000/=, 10,000/=, 5,000/= என மொத்தமாக ரூபாய் ஒரு இலட்சம் தண்டப்பணம் அறவிடப்பட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
இச் சோதனை நடவடிக்கையில், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.என்.எம். பைலான் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.