பாறுக் ஷிஹான்.
சம்மாந்துறை பிரதேச சபையில் ஆட்சியைத் தீர்மானிக்கின்ற சக்தியாக வானொலி பெட்டி விளங்கும் என வருகின்ற உள்ளூராட்சி சபைத்தேர்தலில் இப்பிரதேச சபைக்கு வானொலி பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிற சுயேட்சைக்குழு -03 இன் தலைமை வேட்பாளர் சமூக சேவையாளர் எஸ்.எல்.ஏ.நஸார் தெரிவித்தார்.
இச்சுயேட்சைக்குழுவின் தேர்தல் அலுவலகத்திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (13) இரவு சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது. பேரணியாக வேட்பாளர்கள் வெடி ஆரவாரங்களுக்கு மத்தியில் அழைத்து வரப்பட்டு மாலை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டனர்.
சமய அனுட்டானங்களைத் தொடர்ந்து வேட்பாளர்கள் அறிமுகம் இடம்பெற்றது. தொடர்ந்து இச்சுயேட்சைக் குழுவின் பிரசாரப்பீரங்கியும், சமூக, பொதுநல, அரசியல், ஊடகச்செயற்பாட்டாளருமான அஹமட் புர்கான் சிறப்புரை மேற்கொண்டார்.
பிற்பாடு சுயேட்சைக்குழுத் தலைவரும், தலைமை வேட்பாளருமான நஸார் பேசும் போது,
சம்மாந்துறை மண்ணும் மக்களும் இன்று ஏதிலிகளாக உள்ளார்கள். காரணம் கடந்த 30 வருடங்களாக காங்கிரஸ்காரர்கள் உள்ளிட்ட கட்சிக்காரர்கள் எமது மண்ணையும், மக்களையும் தொடர்ந்தேர்சையாக ஏமாற்றி வந்துள்ளார்கள். இனியும் ஏமாற்றக் காத்திருக்கின்றார்கள்.
எமது மண் மாட்சி பெற வேண்டும். எமது மக்கள் மீட்சி பெற வேண்டும். அதற்கு காங்கிரஸ்காரர்கள் உள்ளிட்ட கட்சிக்காரர்களின் சூழ்ச்சிகளிலிருந்து விடுபட வேண்டியுள்ளது.
ஆகவே தான், எமது மண்ணையும் மக்களையும் காப்பாற்ற வேண்டுமென்கிற சமூக நோக்கத்தை முன்னிறுத்தி பிரதேச சபைக்கு சுயேட்சையாக போட்டியிடுகின்றோம்.
சம்மாந்துறைத்தொகுதி மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ய கூடியளவுக்கு வாக்கு வலிமையை கொண்டது. ஆனால், சம்மாந்துறை தொகுதிக்கு அண்மைய காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்ச்சியாக கிடைப்பதாக இல்லை.
ஆனால், எமது மக்களின் வாக்குகளை வைத்து வேறு தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் எம்பிகளாக வருகின்றனர். அவர்கள் எமது மண்ணையும் மக்களையும் கண்டு கொள்வதே இல்லை. இந்நிலை மாற வேண்டும். மாற்றம் ஒன்றே முன்னேற்றத்துக்கான வழி.
அந்த அரசியல்வாதிகள் தான் நாம் இன்று தேர்தல் கேட்பதற்கான காரணமாவர். சம்மாந்துறை பிரதேச சபையிலிருந்து மாற்றம் உருவாக வேண்டுமென்பது எமது எதிர்பார்ப்பு. சம்மாந்துறை பிரதேச சபையில் ஆட்சியைத்தீர்மானிக்கிற சக்தியாக வானொலி பெட்டி விளங்கும்.
நாட்டு மக்கள் ஒருமித்து கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திசைகாட்டிக்கு வாக்களித்தார்கள். அதே போல சம்மாந்துறை பிரதேச மக்கள் ஒருமித்து வானொலி பேட்டிக்கு வாக்களிக்கின்ற பட்சத்தில் எம்மால் பிரதேச சபையில் ஆட்சியை உருவாக்கி நடத்தவும் முடியும் என்றார்.