Ads Area

உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்க இதயத்தில் அடைப்பு இருக்குன்னு அர்த்தம்... உஷார்.

சமீப காலமாக இதய பிரச்சனையால் நிறைய பேர் மரணமடைந்து வருகின்றனர். அதுவும் இளம் வயதினர் பலர் கடந்த சில ஆண்டுகளாக திடீரென்று இதய பிரச்சனையால் இறந்து வருகிறார்கள். பொதுவாக இதயத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், நெஞ்சில் வலி ஏற்படுவதை வைத்து தெரிந்து கொள்ளலாம் என்று பலரும் நினைக்கின்றனர்.


ஆனால் இதயத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தெளிவான அறிகுறிகளை வெளிப்படுத்துவதில்லை. சில வகையான இதய பிரச்சனையின் அறிகுறி நெஞ்சு பகுதியில் வலியை ஏற்படுத்தாமல், எதிர்பாராத வேறு சில அறிகுறிகளை வெளிப்படுத்தலாம்.


ஒருவரது இதயத்தில் பிரச்சனை வருவதற்கு உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையுடன், மோசமான உணவுப்பழக்கங்களும் தான் காரணம். அதுவும் கொழுப்புள்ள உணவுகளை அதிகம் எடுக்கும் போது, அதன் விளைவாக இதயத்திற்கு செல்லும் குழாய்களில் கொழுப்புக்கள் தேங்கி அடைப்புகள் ஏற்பட்டு, நாளடைவில் மாரடைப்பை ஏற்படுத்தும். ஒருவரது இதய குழாய்களில் அடைப்புகள் இருந்தால், நெஞ்சு வலியைத் தவிர, வேறுசில அறிகுறிகளையும் வெளிப்படுத்தும். இப்படியான அறிகுறிகளானது சாதாரணமாக நாம் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகள் போன்று இருப்பதால், நிறைய பேர் புறக்கணிக்கும் வாய்ப்புள்ளது. இப்போது இதய குழாய்களில் அடைப்பு இருந்தால் வெளிப்படும் சில எச்சரிக்கை அறிகுறிகளைக் காண்போம்.


1. மார்பு அசௌகரியம்.

 

இதயத்தில் அடைப்பு இருந்தால் வெளிப்படும் மிகவும் பொதுவான அறிகுறி தான் மார்பு அசௌகரியம். ஒருவரது இதயக் குழாய்களில் அடைப்பு இருந்தாலோ அல்லது மாரடைப்பு ஏற்பட்டாலோ, மார்பு பகுதியில் வலி, இறுக்கம் அல்லது அழுத்தம் போன்றவற்றை சந்திக்க நேரிடும். அதுவும் இப்படியான உணர்வு சில நிமிடங்களுக்கு மேல் நீடித்திருக்கும். முக்கியமாக இப்படியான உணர்வு ஓய்வு எடுக்கும் போதோ அல்லது ஏதாவது வேலை செய்யும் போதோ நிகழலாம்.


2. குமட்டல் மற்றும் நெஞ்செரிச்சல். 


இதய குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால், அது பலருக்கு குமட்டல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். சில சமயங்களில் வாந்தி கூட வரலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதுவும் ஆண்களை விட பெண்கள் இந்த மாதிரியான அறிகுறிகளை அதிகம் சந்திப்பதாக கூறப்படுகிறது. 


3. கை வரை பரவும் வலி.

 

இதயத்தில் உள்ள அடைப்பை குறிக்கும் மற்றொரு பொதுவான அறிகுறி உடலின் இடது பக்கம் வரை வலி பரவியிருப்பதாகும். அதுவும் இந்த வலியானது நெஞ்சு பகுதியில் ஆரம்பித்து, பின் மெதுவான உடலின் இடது பக்கத்தில் பரவி, பின் மாரடைப்பாக மாறக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 


4. தலைச்சுற்றல். 


இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய்களில் அடைப்பு இருந்தால், அது ஒருவரது சமநிலையை இழக்கச் செய்யலாம் அல்லது ஒருவருக்கு தலைச்சுற்றலை ஏற்படுத்தலாம். தலைச்சுற்றல் பல ஆரோக்கிய பிரச்சனைகளின் அறிகுறியாக இருப்பதால், நிறைய பேர் இதைப் புறக்கணிக்கலாம். ஆனால் தலைச்சுற்றலுடன் நெஞ்சு பகுதியில் அசௌகரியம், மூச்சுத்திணறல் போன்றவை ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.


5. தொண்டை மற்றும் தாடை வலி. 


தொண்டை வலி மற்றும் தாடை வலியை சந்தித்தால், அது இதய பிரச்சனையின் அறிகுறியாக இருக்கும் என்று யாருக்கும் நினைக்கமாட்டோம். பெரும்பாலும் இது தசைப்பிரச்சனை, சளி அல்லது சைனஸ் பிரச்சனையாகவே நினைப்போம். ஆனால் நெஞ்சு பகுதியில் வலி ஏற்பட்டு, பின் அது அப்படியே தொண்டை மற்றும் தாடை வரை வலி பரவினால், அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை ஒருவர் அடிக்கடி சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி, சிகிச்சை மேற்கொண்டால் நிலைமை மோசமாவதைத் தடுத்திடலாம்.


Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe