Ads Area

சம்மாந்துறையில் இடம்பெற்ற பேராசிரியர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் எழுதிய 65 நூல்களின் அறிமுகமும் கண்காட்சியும்.

 நூருல் ஹுதா உமர்.

 

இலங்கை சமாதான கற்கைகள் நிலையப்பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் கடந்த 25 ஆண்டுகளில் எழுதிய 65 நூல்களின் அறிமுகமும் கண்காட்சியும் பன்னூலாசிரியர் கலாபூசணம் ஏ.பீர்முஹம்மது தலைமையில் சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் நேற்று (23) நடைபெற்றது. 


கடந்த 1996ம் ஆண்டு நவமணி பத்திரிகையில் கிழக்கு மாகாண செய்தியாளராக இணைந்ததன் மூலம் தனது எழுத்துகளால் பிரகாசித்த எஸ்.எல்.றியாஸ் 1996 இல் இலங்கை கிரிக்கெட் அணியின் உலக கிண்ண வெற்றியைத்தொடர்ந்து ஊடகவியலாளர் எம்.எம். ஜெஸ்மினும் இணைந்து சர்வதேச கிரிக்கெட் நிகழ்வுகள் என்ற தலைப்பில் டெஸ்ட் விளையாடும் அனைத்து கிரிக்கெட் அணிகளினதும் சாதனைகளை தொகுத்து ஒரு நூலை 2001ம் வருடம் வெளியிட்டார். அதுவே அவரின் முதலாவது நூலாகும். 


அன்று ஆரம்பித்த அவரின் எழுத்துப்பணி இன்றும் தொடர்கிறது. குழந்தை உளவியல் பற்றி 1,400 பக்கங்கள் கொண்ட தனது ஆய்வு நூலை “Understanding and supporting Children Psychological Needs” எனும் தலைப்பில் 2 பாகங்களாக வெளியிட்டிருந்தார். 


மேலும், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டங்கள் பற்றிய ஆய்வு சுமார் 1,100 பக்கங்கள் கொண்ட ஒரே நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இடம்பெறும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் “Violence Against Muslims in Independent India” என்ற ஆய்வு 1,700 பக்கங்கள் கொண்டது. அவை 3 பாகங்களாகக் தொகுக்கப்பட்டுள்ளது. 


“The Evolution of Muslim Political Aspirations in Sri Lanka” என்ற இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு அரசியல் கட்சி ஏன் தேவைப்பட்டது என்ற ஆய்வு ஆதிகாலம் முதல் இன்று வரை ஆய்வு செய்து சுமார் 750 பக்கங்களாக தொகுக்கப்பட்டுள்ளது. 


மேலும், “21st Century Romeo and Juliet” என்ற கதையானது William Shakespeare இன் Romeo Juliet கதையை அடியொற்றி எழுதப்பட்டது. Romeoவும் Juliet உம் 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தால் சமூக ஊடகங்கள் இவர்கள் வாழ்க்கையில் எவ்வாறு செல்வாக்குச் செலுத்தியிருக்கும் என்ற ஒரு கற்பனை நூலை உட்பட தேசிய இனப்பிரச்சினைக்கான காரணங்கள் பற்றிய பல நூல்கள் அடங்களாக 65 நூல்கள் இக்கண்காட்சியில் இடம்பிடித்திருந்தது. 


இந்நிகழ்வில், மூத்த உலமா "வரலாற்றில் ஒரு ஏடு புகழ்" மௌலவி ஏ.சி.எம்.புகாரி, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.அஸ்ரப் தாஹிர், ஏ.ஆதம்பாவா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், ஏ.எம்.நௌசாத் உட்பட நிர்வாக சேவை அதிகாரிகள், சமூக அமைப்புக்களின் பிரதானிகள், உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், கலாநிதி எஸ்.எல்.றியாஸ் அவர்களின் குடும்பத்தினர் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe