தில்சாத் பர்வீஸ்.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி இஸ்மாயில்புரம், புதிய கிராமம் பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர்களை இன்று (22) திங்கட்கிழமை அதிகாலை வேளையில் சம்மாந்துறை ஊழல் ஒழிப்புப்பிரிவினரினால் முற்றுகையிடப்பட்டது.
சம்மாந்துறை ஊழல் ஒழிப்புப்பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, நீண்டகாலமாக இளைஞர்களை இலக்கு வைத்து சூட்சுமமான முறையில் வியாபாரம் செய்து வந்தவரை கைது செய்துள்ளனர்.
வளத்தாப்பிட்டி இஸ்மாயில்புரம் பகுதியைச்சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரொருவரையும், கல்லரிச்சல் 04 பகுதியைச்சேர்ந்த 28 வயதுடைய சந்தேக நபரொருவரையும், வளத்தாப்பிட்டி இஸ்மாயில்புரம் புதிய கிராமம் பகுதியைச்சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரொருவரையும், சம்மாந்துறை 03 பகுதியைச்சேர்ந்த 40 வயதுடைய சந்தேக நபரொருவரும் என நால்வர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 2,321 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 380 மில்லி கிராம் ஹெரோயின், ஒரு தொகைப்பணம், கையடக்கத்தொலைபேசி (03), Power Bank (03), வங்கி அட்டை (03) என்பன மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மூவருக்கு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்படாமல் தலைமறைவாகி இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் ஆலோசனைக்கமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதிப்குமாரவின் வழிகாட்டுதலில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவுப்பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான குழுவினரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

