பாறுக் ஷிஹான்.
பொதுப்போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகரப்பகுதி உட்பட புறநகர்ப்பகுதிகளில் வெள்ளிக்கிழமை (26) மாலை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது, மோட்டார் சைக்கிள் ஆவணம், காப்புறுதி எதுவுமின்றி மோட்டார் சைக்கிளைச்செலுத்துவது, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாது செல்வது, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதிவேகமாகச்செல்வது, மிக ஒலியெழுப்பிய மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களின்றி பயணித்தமை உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 20க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் உட்பட அதனை ஓட்டிய சந்தேக நபர்கள் சட்டநடவடிக்கைக்குட்படுத்தப்பட்டனர்.
இச்சோதனை நடவடிக்கையானது அம்பாரை மாவட்ட கல்முனைப்பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் வழிகாட்டலில் சம்மாந்துறை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என் நிசாந்த பிரதிப்குமாரவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.
கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய பொதுப்போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டன.
மேலும், குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சம்மாந்துறை, சவளக்கடை, மத்திய முகாம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


