பாறுக் ஷிஹான்.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் கை ஒலிபெருக்கிகளைப்பயன்படுத்தி வியாபாரம் மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தகைய செயற்பாடுகள் மதஸ்தலங்களில் நடைபெறும் வணக்க வழிபாடுகள் மற்றும் பொதுப்போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன், சத்தமூட்டலால் பொதுமக்கள் அசௌகரியமடைவதாகக் கூறப்படுகிறது.
இதனடிப்படையில், சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலையம் ஆகியன இணைந்து ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 2025.09.04 முதல் 2025.09.23 வரையான காலப்பகுதியில் 11 ஒலி பெருக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பிரதேச சபை தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்பதோடு, அனைத்து வியாபாரிகளும் சம்மாந்துறை பிரதேச சபையின் விதிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.