பாறுக் ஷிஹான்.
வீடொன்றில் வளர்க்கப்பட்ட பூனையொன்று அப்பகுதியிலுள்ள 5 பேரை கடித்த நிலையில் இறந்த சம்பவம் கல்முனைப்பகுதியில் பதிவாகியுள்ளது.
அம்பாறை மாவட்டம், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நகர மண்டப வீதியில் இச்சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பூனை 5 பேரை கடித்த பின்னர் தலைமறைவாகி இருந்துள்ளதுடன், நீண்ட தேடுதலின் பின்னர் இறந்த நிலையில் மீட்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
உடனடியாக சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு வருகை தந்த அவ்வதிகாரிகள் குறித்த பூனையை மீட்டு பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர் மேலதிக பரிசோதனைக்காக அப்பூனையின் தலை வெட்டி எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
இதே போன்று, அண்மையில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட புறநகர்ப்பகுதியில் பல பேரை கட்டாக்காலி நாய் கடித்த சம்பவம் பதிவாகியிருந்தது.
இதற்கமைய குறித்த நபர்களுக்கு கடித்த நாயின் மாதிரி அறிக்கை Rabies Positive என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI) இனால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பிரதேசத்தில், பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டல் மற்றும் வளர்ப்பு நாய்கள், கட்டாக்காலி நாய்களுக்கு ARV தடுப்பூசி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

