Ads Area

வெள்ளத்தில் மூழ்கியுள்ள அம்பாறை : மக்களை அவதானமாக இருக்க கோரிக்கை !

 நூருல் ஹுதா உமர் 


நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், மக்கள் அதிகம் பாவிக்கும் முக்கிய வீதிகள் பலவும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றது. 


அத்தோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர்,காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை , நாவிதன்வெளி, மருதமுனை, பெரியநீலாவணை போன்ற பிரதேசங்களும் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள சில வீட்டுத்திட்டங்களும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.


மரங்கள் அடியோடு சாய்ந்தும், முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்தும் சில இடங்களில் தடைப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது. இதனால் தாழ்நிலப் பிரதேசங்கள், வீடுகள், வீதிகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கக் கூடிய அபாயமும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பெய்துவரும் கனமழை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் பாதைகளுக்கு மேலாக வெள்ள நீர் பாய்ந்தோடுவதால் பொது மக்களுக்கான சீரான போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம் றியாஸ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவித்துள்ளார்.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe