பாறுக் ஷிஹான்.
நீண்டகாலமாக வொலிவேரியன் கிராமத்தில் தூர்வாரப்படாமல் காணப்படும் நீர் வடிந்தோடும் கான்களைத்துப்பரவு செய்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிற்குட்பட்ட வொலிவேரியன் கிராமத்தில் அதிகளவான கான்கள் அசுத்தமடைந்து காணப்படுகின்றது.
இங்கு பல நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கிக்காணப்படுவதுடன், துர்நாற்றமும் வீசுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலைமை மக்களின் சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதைக்கருத்திற்கொண்டு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியினால் இதற்கான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவாவிற்கும் கிழக்கு மாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கும் அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், “சுற்றுச்சூழலைப்பாதுகாப்பது நம்முடைய ஒவ்வொருவரின் கடமையாகும்” எனும் தொனிப்பொருளில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் ஆலோசனைக்கமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன் தலைமையில் பொதுச்சுகாதாரப்பரிசோதகர்கள் மற்றும் நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்ளின் பங்கேற்புடன் அப்பகுதியில் பல்வேறு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



