குவைத்தில் நேற்று(29/03/26) முன்தினம் ஞாயற்றுக்கிழமை இரவு சுமார் 11:30 மணி அளவில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மீதான ஈரான் தாக்குதலில், சிதறல்கள் விழுந்ததால் உயிரிழந்த இந்தியரான தமிழகம், ராமநாதபுரம் மாவட்டம், முத்துக்குளத்தூர் அடுத்த தேரிருவேலி பகுதியை சேர்ந்த சந்தானச் செல்வம்(37) என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தியை வெளியிட்டிருந்தோம். இதையடுத்து உயிரிழந்த சந்தானச் செல்வத்திற்கு இந்திய தூதரகம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நேற்றைய(30/03/26) திங்கள்கிழமை குவைத்தின் மத்திய சவக்கிடங்கிற்கு சென்று குவைத்திற்கான இந்திய தூதர் பரமிதா திரிபாதி சந்தானச் செல்வம் உடலை நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து தூதரகம் வெளியிட்டிருந்த செய்தியில்,
உயிரிழந்த சந்தானம் குடும்பத்தினருடன் தூதரகம் தொடர்பில் உள்ளது எனவும், உடலை விரைவாக தாயகம் கொண்டு செல்வதற்காக குவைத் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்திருந்தன.
இதையடுத்து இந்திய தூதர் மேற்பார்வையில் துரிதமாக உடல் தாயகம் அனுப்ப தேவையான நடவடிக்கைள் எடுக்கப்பட்டதை தொடர்ந்து,குவைத் நேரப்படி இன்று(31/03/26) செவ்வாய்கிழமை 12:00 மணிக்கு குவைத் ஏர்வேஸ் சிறப்பு விமானம் மூலம் அவருடைய உடல் இந்தியா எடுத்து செல்லப்படுகிறது. உயிரிழந்த சந்தானச் செல்வம் அவர்களுக்கு கவுசல்யா என்ற மனைவியும்,ஜஸ்வின் (7) என்ற மகனும், சாய் யுவன்யா (3) என்ற மகளும் உள்ளனர். உயிரிழந்த சந்தானம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குவைத்தில் வேலை செய்து வந்தார்.
மேலும் பதட்டமான சூழல் காரணமாக குவைத்திலிருந்து நேரடியான விமான சேவைகள் இல்லாத காரணத்தால் உடல்நலக்குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் உயிரிழந்த இந்தியர்கள் பலரது உடல்கள் உடனடியாக ஊருக்கு அனுப்ப முடியவில்லை. அப்படி இறந்த சுமார் 23 இந்தியர்கள் உடல்களும் இன்றைய தினம் , சந்தானச் செல்வம் அவருடைய உடலுடன் இரண்டு குவைத் ஏர்வேஸ் விமானம் மூலம் தாயகம் செல்கின்றன. இதில் 4 உடல்கள் சிறப்பு விமானம் மூலம் மும்பைக்கும், 20 உடல்கள் கொச்சிக்கும் எடுத்து செல்லப்பட்டு அங்கிருந்து சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் குவைத்தில் கடந்த தினங்களில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த சில இலங்கை நாட்டவர்கள் உடல்கள் இலங்கையில் ஒப்படைக்க விமானம் இலங்கை சென்று அங்கிருந்து கோச்சி செல்லும் என்று தெரிகிறது.
மேலும் தாயகம் செல்லும் 24 இந்தியர்கள் உடல்களில் தமிழகத்தை சேர்ந்த இசக்கி முத்து(திருநெல்வேலி), மகாலிங்கம்(திட்டச்சேரி),தௌஃபீக் கான்(உத்திர பிரதேசம்),அப்துல் காதிர்(உத்திர பிரதேசம்),விக்ரம் பாபு புங்கா(ஆந்திர பிரதேசம்),நர்கே மில்லி குழந்தை(ஆந்திர பிரதேசம்), குமார் சந்தோஷ்(டெல்லி), குளிவிண்டர் சிங்(டில்லி) மற்றும் நேற்று முன்தினம் ஈரான் தாக்குதலில் உயிரிழந்த சந்தானச் செல்வம்(இராமநாதபுரம்) உட்பட 9 பேர் உடல்கள் தாயகம் அனுப்ப தேவையான அனைத்து ஆவணப்பணிகளையும் குவைத் சமூக சேவகரும் மற்றும் குவைத் இந்திய தூதரக பிரதிநிதியுமான அலிபாய் அவர்கள் செய்து முடித்தார். இவர் குவைத்திலுள்ள மக்கள் சேவை மையத்திலும் இணைந்து செயல்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மற்ற 15 இந்தியர்கள் உடல்களை தாயகம் அனுப்ப தேவையான பணிகளை குவைத்திலுள்ள மற்ற சில இந்திய அமைப்புகள் இந்திய தூதரகத்தின் உதவியுடன் ஒருங்கிணைந்து முடித்திருந்தனர்.
இதற்கிடையே ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று சென்ற ஈரான் தாக்குதலில் உயிரிழந்த சந்தானச் செல்வம் அவருடைய மனைவி கவுசல்யா மற்றும் ஊர்மக்கள் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோனை சந்தித்து, குவைத் நாட்டில் இறந்த தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவும், தனது குடும்ப வாழ்வாதாரத்துக்கும், குழந்தைகளை படிக்க வைக்கவும் நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க மனு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மேற்காசியப் போரில் இதுவரை பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

